ஹைட்ரோகார்பன் திட்டம் சம்பந்தமாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும், சந்தேகத்தையும் போக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (ஜன.20) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் விவசாயத்தைப் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக தமிழக விவசாயிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டியது மிக மிக அவசியமான, தேவையான ஒன்று. காரணம் டெல்டா மாவட்டப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த அப்பகுதி விவசாயிகள் மட்டுமல்ல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் சுமார் 3,200 சதுர கி.மீ. பரப்பளவில் 4 ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்போது ஐந்தாவதாக இத்திட்டத்திற்காக ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஏலத்தில் இத்திட்டத்திற்காக சுமார் 4,064 சதுர கி.மீ. பரப்பளவுக்கு உரிமம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 4 ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு ஒதுக்கிய பரப்பளவை விட இப்போதைய ஏலத்தில் 5-வது ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவு அதிகம். மேலும் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக மக்களின் கருத்தைக் கேட்க வேண்டியதில்லை என்பதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமருக்கும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியிருப்பது தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.
அதுமட்டுமல்ல தமிழகத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி ஹைட்ரோகார்பன் திட்டம் உள்பட வேறு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்ததும் முக்கியமானது.
எனவே, தமிழக டெல்டா விவசாயிகளுக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள அச்சத்தையும், சந்தேகத்தையும் போக்கவும், தமிழகத்தில் விளைநிலங்களையும், நீராதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற வகையில் விவசாயிகளுக்கு எதிராக முடிவுகள் எடுக்காமல் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
36 mins ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago