கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உயிரிழந்த குரங்குக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை செய்தனர். குரங்கைப் புதைத்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பவும் முடிவு செய்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே அகரபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜன்பேட்டை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் கடந்த ஐந்து வருடங்களாக குரங்கு ஒன்று கிராம மக்களுடன் பழகி வந்தது. அந்தக் குரங்குக்கு பாலா என்றும் பெயர் வைத்த கிராம மக்கள் அதனுடன் அடிக்கடி செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்து வந்தனர்.
மேலும் அந்தக் குரங்குக்கு கிராம மக்கள் பல்வேறு வகையான உணவுகளைக் கொடுத்து வந்தனர். இதனால் அந்தக் குரங்கு அக்கிராமத்திலேயே சுற்றி வந்தது.
சில நாட்களுக்கு முன்பு அந்தக் குரங்கு அப்பகுதியில் செல்லும் மின்கம்பியில் தாவிச் சென்றபோது மின்சாரம் தாக்கியது. இதில் குரங்கின் கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் காயம்பட்ட குரங்கைக் காப்பாற்றி முதலுதவி அளித்து பாதுகாத்து வந்தனர்.
இவ்வாறான நிலையில் அந்தக் குரங்கு நேற்று எதிர்பாராமல் உயிரிழந்தது. இதனால் அக்கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். பின்னர் அந்த உயிரிழந்த குரங்கின் உடலுக்கு சகல வாசனைத் திரவியங்களையும் தெளித்தனர். மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்து கிராமத்தின் சாலையோரம் உள்ள ஒரு இடத்தில் புதைத்தனர். அந்த உயிரிழந்த குரங்கின் இறுதி மரியாதையின்போது வாணவேடிக்கை வெடித்து தங்களின் துக்கத்தை அனுசரித்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ''அந்தக் குரங்குக்கு நாங்கள் பாலா என்று பெயரிட்டு அழைத்து வந்தோம். ஆரம்பத்தில் பாலா சின்னச் சின்ன தொல்லைகள் தந்தாலும் போகப்போக எங்களுக்கு நண்பனாகவே மாறியது. எதிர்பாராமல் இப்படி மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. குரங்கைப் புதைத்த இடத்தில் ஒரு கோயில் எழுப்ப முடிவு செய்துள்ளோம்'' என்று சோகத்துடன் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
40 mins ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago