பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஜல்லிக்கட்டுக் காளைகள் கணக்கெடுப்பு ஆன்லைன் மூலம் தொடங்கி நடக்கிறது.
இதில், மதுரை, திருச்சி மாவட்டங்களில் காளை வளர்ப்போர் ஆர்வமாக தாங்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழரின் வீரம், பண்பாடு, கலாச்சார அடையாங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை நாட்களில் நடக்க உள்ளது. இதில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ் பெற்றவை.
இந்த போட்டிகளைக் காண உள்ளூர் பார்வையாளர்கள் உலக சுற்றுலாப் பயணிகள் வரை குவிவார்கள். தற்போது இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊர், ஜல்லிக்கட்டு விழா கமிட்டிகள் செய்து வருகின்றன.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பெரும்பாலும் புலிகுளம், காங்கேயம் மற்றும் உப்பாலாச்சேரி காளையினங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர சொற்ப அளவில் தேனி மலை மாடு, வத்ராயிருப்பு மாடு மற்றும் வரையறுக்கப்படாத காளையினங்கள் உள்ளிட்ட மற்ற காளையினங்களும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தயார்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகள் கணக்கெடுக்கும் பணி கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஆன்லைன் மூலம் தொடங்கி நடக்கிறது.
இந்த கணக்கெடுப்பில் மதுரை, திருச்சி மாவட்டங்களில் காளை வளர்ப்போர் தங்கள் ஜல்லிக்கட்டு காளைகளை ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து மதுரை கால்நடைத்துறை மாவட்ட இணை இயக்குனர் டி.சுரேஷ் கிறிஸ்டோபர் கூறியதாவது:
கால்நடைகள் கணக்கெடுப்பு விவரம், கால்நடை பராமரிப்பு துறையில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் எத்தனை ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளன, அதன் இனங்கள் உள்ளிட்ட தனியான எண்ணிக்கை விவரம் இல்லை.
அதை கணக்கெடுக்கவே இந்த முறை இந்த ஆன்லைன் கணக்கெடுப்பு முறை கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவர்கள் மேற்கொள்கின்றனர். இதற்காக கால்நடை மருத்துவமனைகளில் புதிய டேட்டா தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அவை இல்லாத இடங்களில் புதிதாக அமைக்கப்படுகிறது.
காளைகளை பதிவு செய்வதற்காக கால்நடை பராமரிப்பு துறை தனி ஆன்லைன் சாஃப்ட்வேர் ஒன்றை தயார் செய்துள்ளது. அதில், ஜல்லிக்கட்டுகாளையின் இனம், வயது, உயரம், நிறம், கொம்பின் இடைவெளி, வலது கண்ணின் கருவிழித்திரை புகைப்படம் உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளுடன் அந்த மாட்டின் உரிமையாளர்களின் பெயர். முகவரி, ஆதார் கார்டு மற்றும் தகவல் தொடர்பு கொள்ள அலைபேசி எண் ஆசியவை இணைத்து பதிவு செய்யப்படுகிறது.
காளை விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து முடிந்ததும், அந்த தரவுகளை ஆய்வு செய்வோம். காளைகள் எண்ணிக்கையை தெரியவந்தபிறகு ஆன்லைனில் ஜல்லிக்கட்டு காளைகள் விவரம் வெளியிடப்படும். அதன்பிறகு ஒவ்வோர் ஊரிலும் எத்தனை காளைகள் இருக்கின்றன, அவை எந்த இனத்தைச் சார்ந்தவை என்ற விவரம் தெரியவரும்.
கருவிழி புகைப்படம், கைரேகையை விட தனித்துவம் வாய்ந்தது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும்போது அந்தக் காளையை அடையாளம் கண்டுபிடித்துவிடுவோம்.
போட்டிகளில் கலந்துகொள்ள காளைகளுக்க குறைந்தபட்சம் 3 வயதும், உயரம் 120 சென்டி மீட்டர் இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கு பெற தகுதி உடையதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆன்லைன் பதிவு விவரங்களை வைத்து எளிதாக ஜல்லிக்கட்டு காளைகள் தரத்தை மதிப்பீடு செய்துவிடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
இந்தியா
33 mins ago
சினிமா
50 mins ago
வலைஞர் பக்கம்
1 hour ago
கல்வி
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
12 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சுற்றுலா
2 hours ago