தாயின் கண் முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட அதிமுக பிரமுகர் : 3 நாட்களுக்கு முன் வந்த கட்சிப்பதவி

By செய்திப்பிரிவு

விருதுநகரில் அதிமுக நிர்வாகி ஒருவர் தனது தாயின் முன்னிலையில் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டார். கொலை செய்து தப்பிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டி அண்ணா புதுத் தெருவில் வசித்தவர் சண்முகவேல் ராஜன் (44). சொந்தமாக கட்டிட கட்டுமான பொருள் விற்பனை செய்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். அதிமுகவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு மேற்கு ஒன்றிய அதிமுக மாணவர் அணி அவைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

சண்முகவேல் ராஜனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நேற்றிரவு தனது வீட்டு வாசலில் அமர்ந்து எதிர்வீட்டு வாசலில் அமர்ந்திருந்த தனது தாயாருடன் சண்முகவேல் ராஜன் பேசிக்கொண்டிருந்தார். அது குறுகலான தெருவாகும். அப்போது முகத்தை கைக்குட்டையால் மூடியபடி, ஹெல்மெட் அணிந்தபடி கையில் அரிவாளுடன் இரண்டு இரு சக்கர வாகனங்களில் 6 பேர் வந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் அவர்களைப்பார்த்து சண்முகவேல் சுதாரிப்பதற்குமுன் வீட்டு வாசலில் இருந்து அவரை தெருவில் இழுத்துப் போட்டு சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர். இதைப்பார்த்து பதறிப்போன வயதான அவரது தாயார் குறுக்கே புகுந்து தடுக்க முயன்றார். அவரை அந்த கும்பல் பிடித்து கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்த அவர் மீண்டும் எழுந்து தடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பலில் ஒருவன் அவரை அரிவாளால் வெட்டுவதுபோன்று மிரட்டினான்.

மற்ற 5 பேரும் கீழே விழுந்துக்கிடந்த சண்முகவேல் ராஜனை வெட்டுவதிலேயே குறியாக இருந்தனர். வீட்டுக்குள் ஓடிச் சென்ற அவரது தாய் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துவந்து அவர்கள் மீது வீசினார். அதற்கும் ஆறுபேரும் சரமாரியாக சண்முகவேல் ராஜனை வெட்டிக்கொன்றுவிட்டு சாவகாசமாக மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது.

தகவலறிந்து விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகவேல் ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சண்முகவேல் ராஜன் கொலையுடன் சேர்த்து பிப்ரவரி மாதத்திலில்ருந்து இது 4 வது கொலை என்கின்றனர் அங்குள்ள பொதுமக்கள். தொடர்ச்சியாக முன்பகை காரணமாக மாறி மாறி இதுவரை 8 கொலைகள்வரை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாகவே சண்முகவேல் ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனையும் இரவு முழுதும் நடந்தது. ஆனால் யாரும் பிடிபடவில்லை. பொதுவாக இதுபோன்ற விவகாரத்தில் கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடைவது வழக்கம் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

37 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்