நிர்வாக ரீதியாக மதுரை நகரை இரண்டாகப் பிரிக்க திட்டம்?- குற்றத்தடுப்புக்காக காவல்துறை புதிய முயற்சி

By என்.சன்னாசி

மதுரை

சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்புக்காக நிர்வாக ரீதியாக மதுரை நகரை தெற்கு, வடக்கு எனப் பிரித்து அதிகாரிகளுக்கு இரு அதிகாரம் வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதேவேளையில் அலுவல் ரீதியாக அதிகாரிகள் மட்டத்தில் இரு பகுதிக்கான அதிகாரமும் ஒருவருக்கே வழங்கி செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

மதுரை நகரில் 4 மகளிர் காவல் நிலையங்கள் உட்பட 22 காவல் நிலையங்களிலும் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிகின்றனர்.
மக்கள் தொகை அதிகரிப்பு, காவல் நிலைய எல்லையை கருத்தில் கொண்டு நிர்வாக வசதிக்கென தல்லாகுளம், அண்ணாநகர், கூடல்புதூர், அவனியாபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களை இரண்டாகப் பிரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக திருப்பாலை, மாட்டுத்தாவணி பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.

நகரில் அடிக்கடி நடக்கும் வழிப்பறி, பூட்டிய வீடுகளில் திருட்டு, கொள்ளை, கொலை மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை தடுக்க, காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இருப்பினும், குற்றத் தடுப்பை குறைப்பதும் மட்டும் போலீஸாருக்கு சவாலாகவே உள்ளது. நகரில் குற்றப்பிரிவைவிட, சட்டம், ஒழுங்கு காவல்துறையில் கூடுதல் போலீஸார் இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வாகனத் தணிக்கை, பழைய குற்றவாளிகளை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் மட்டத்தில் சற்று தொய்வுநிலை ஏற்படுவதாக புகார் எழுகிறது.

சட்டம், ஒழுங்கு போலீஸாரின் கெடுபிடி அதிகரித்தாலே வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை துரிதமாக தடுக்க முடியும் என, அதிகாரிகள் நம்புகின்றனர்.

இது தொடர்பாக சமீபத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவை கவனிக்கும் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் இரண்டையும் இணைத்துப் பார்க்கும் அதிகாரத்தை வழங்கலாம் என விவாதிக்கப்பட்டது.

இதன்படி, காவல்துறை நிர்வாக வசதிக்காக மதுரை நகரை வைகை ஆற்றுக்கு தெற்கு, வடக்கு என இரண்டாகப் பிரித்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான அறிக்கை ஒன்றும் தயராக்கப்படுகிறது. சென்னை நகரில் குற்றங்களைத் தடுக்க, குறிப்பிட்ட பகுதியில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும், திருச்சியிலும் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது எனவும் காவல் துறை தரப்பில் கூறுகின்றனர். மதுரையிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், குற்றச்செயல், விபத்துக்களை வெகுவாகக் குறைக்க முடியும் என நம்புகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பொதுவாக எந்த குற்றச்செயலாக இருந்தாலும், இருபிரிவு போலீஸாரும் இணைந்தே தடுக்க வேண்டும். நகரிலுள்ள சில காவல் நிலையங்களில் சட்டம், ஒழுங்கு, குற்றச்சம்பவங்களை பிரித்து பார்க்கும் சூழல் உள்ளது. வழக்கு விவரம் தனித்தனியே பதிவு செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், புகார்தாரர்களைக் கையாள்வதில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்பதை தவிர்க்க, நிர்வாக ரீதியாக மதுரை நகர இரண்டாக பிரிக்கலாம் என யோசனை உள்ளது.

அதிகாரிகள் மட்டத்தில் இது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தயாரித்து, டிஜிபியிடம் ஒப்புதல் பெறவேண்டும். அதன்பிறகே இந்த புதுத் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

17 mins ago

சினிமா

30 mins ago

விளையாட்டு

36 mins ago

சினிமா

42 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

48 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்