உள்ளூரில் நீரைச் சேமிக்க முடியாமல் இஸ்ரேல் போவதாக முதல்வர் பழனிசாமி கூறுவது விநோதம்: ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை

உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் இஸ்ரேல் போவதாக, முதல்வர் பழனிசாமி கூறுவது விநோதம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (செப்.11) வெளியிட்ட அறிக்கையில், "நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்குச் செல்கிறேன் என்று வெளிநாடுகளில் இரண்டு வாரச் சுற்றுலா முடித்து, சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் பேட்டியளித்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொள்ளிடம் ஆற்றிலிருந்து கடலில் கலந்து வீணாகும் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் பற்றி கவலைப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது.

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூருக்கு வந்த காவிரி நீர், இன்னும் காவிரி டெல்டாவில் பல இடங்களில் கடைமடைக்குப் போய்ச் சேரவில்லை.

திமுக ஆட்சியில் முதன்முதலாகச் செயல்படுத்தப்பட்ட காவிரி கால்வாய் தூர்வாரும் திட்டத்தையும் அதிமுக அரசு கைவிட்டு, கமிஷன் அடிப்பதற்காக மட்டுமே தூர்வாருகிறோம் என்ற பெயரில் நிதி ஒதுக்கி, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள ஆங்காங்கே கமிஷன் வாங்குகின்றனர்.

கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் கடலில் வீணாகப் போய் கலந்தது. இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர், இப்படி பயனற்றுப் போய்க் கொண்டிருக்கிறது.

முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கொள்ளிடத்தில் 6 டிஎம்சி நீரைத் தேக்கிவைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் 480 கோடி ரூபாயில் கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேலாகியும், பல அறிவிப்புகளுக்கு நேர்ந்த கதி அதற்கும் ஏற்பட்டு, தடுப்பணைகள் கட்டப்படவில்லை.

கொள்ளிடம் ஆற்றில் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு ஓரிடத்தில் அக்கம் பக்கம் இருக்கும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு வராத வகையில் தடுப்பணைகள் கட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அந்தத் தொழில்நுட்பங்கள் அறிந்த பொறியாளர்கள் தமிழகப் பொதுப்பணித்துறையில் இருக்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

ஆனால் அதுபற்றியோ, கடலில் கலக்கும் காவிரி நீரை உரிய வகையில், வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றுவதிலோ முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கறையுமில்லை, ஆர்வமும் இல்லை. 'நானும் ஒரு விவசாயி' என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லிக் கொண்டே விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை படுகுழியில் தள்ளி, மண்ணைப் போட்டு மூடுவதிலேயே முதல்வர் கவனமுடன் செயல்படுகிறார்.

நீர் மேலாண்மையில் அதிமுக அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. பொதுப்பணித்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வர் காட்டும் அலட்சியத்தால், பொதுப்பணித்துறை இப்போது வருகின்ற தண்ணீரையும் பாதுகாக்க முடியாமல் வீணடிக்கும் 'புதுப்பணித்' துறையாக மாற்றப்பட்டுள்ளது.

அத்துறையில் பல்வேறு பொறுப்புகளுக்கு பொறியாளர்கள் நியமிக்கப்படாமல் காலியாக கிடக்கின்றன என்று செய்திகள் வருகின்றன; பிறகு எப்படி பணிகள் நடக்கும்?

பொறியாளர்கள் மாற்றலில் தொடங்கி, பதவி உயர்வு வரை லஞ்ச லாவண்யம் அத்துறையில் தலைவிரித்தாடுவதால், திறமையான பொறியாளர்கள் இருந்தும் அந்தத் துறை இன்றைக்கு மேட்டூர் அணையில் நிரம்பும் நீரைக் கூட விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் வழங்கிட முடியாமல் தவிக்கிறது.

குடிமராமத்துப் பணிகள் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, ஆங்காங்கே அதிமுகவினர் 'கமிஷன்' அடிக்கும் பணியாக நடைபெற்று வருகிறது. அதற்கு உடன்படாத பொறியாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இந்த லட்சணத்தில் நீர் சிக்கனம்' பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதைப் பார்த்து, பொதுப்பணித்துறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் எள்ளி நகையாடுகிறார்கள்.

வீட்டையே முறைப்படுத்த முடியாதவர், நாட்டை முறைப்படுத்தக் கிளம்பி விட்டார் என்று பொது வெளியில் கேலி பேசுவது எடப்பாடிக்கு எட்டவில்லை போலிருக்கிறது!

கோடையிலும், வறட்சியிலும் பாதிப்புக்குள்ளாகி, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் குடங்களை தூக்கிக் கொண்டு இரவு பகலாக அலைந்த தாய்மார்கள் இன்று காவிரி நீர் கடலில் கலப்பதைப் பார்த்து கண்ணீர் சிந்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே, காவிரி நீரைச் சேமிப்பதற்கும் நன்கு பயன்படுத்துவதற்கும் உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிவித்த கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டங்களை, அறிவிப்போடு இழுத்து மூடிவிடாமல், உடனடியாக நிறைவேற்றி கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல், கடலில் கலக்க அனுமதித்து விட்டு, உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக 'இஸ்ரேல் போகிறேன்' என்பது வேடிக்கை மிகுந்த விநோதமாக இருக்கிறது.

ஆதலால், மறைந்த ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது விரைந்து நிறைவேற்றிட எடப்பாடி பழனிசாமி முன்வந்திட வேண்டும்," என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்