தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன?- திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை,

காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என்றோ, இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்தக் கருத்தையும் நான் தொலைக்காட்சி விவாதத்தில் பேசவில்லை என்று திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த வாரம் ரிபப்ளிக் ஆங்கிலத் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற திமுக வழக்கறிஞர் சரவணன் பேசியதாக காணொலி ஒன்று வைரலானது. அதில் அவர் காஷ்மீர் குறித்துப் பேச, அதற்கு நெறியாளர் ஆட்சேபம் தெரிவித்து ஸ்டாலின் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டார். தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட சரவணன் மைக்கை கழற்றிவிட்டு விவாதத்தை விட்டு வெளியேறினார்.

சரவணன் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசியதாகவும் திமுக மவுனம் காப்பதாகவும் சமூக வலைதளங்களில் காணொலியுடன் செய்திகள் வைரலாகின.

இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம்:

“கடந்த 12.08.2019 ரிபப்ளிக் டிவியில் காஷ்மீர் விவகாரம் பற்றிய விவாதத்தில், திமுகவின் சார்பாக கலந்துகொண்டேன். அந்த விவாதத்தின்போது, திமுகவின் நிலைப்பாடு பற்றி விளக்கிய பின், காஷ்மீர் பற்றிய வரலாற்றைப் பேச முற்படுகையில், “Kashmir was never an integral part of India” என்று சொன்னவுடன், நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி மேற்கொண்டு பேச விடாமல் கடுமையான வார்த்தைகளால் என்னைத் தாக்க ஆரம்பித்தார்.

மற்ற பங்கேற்பாளர்களும் அவருடன் சேர்ந்து கடுஞ்சொற்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அர்னாப் கோஸ்வாமி விளக்கம் சொல்ல வேண்டுமென்று சொல்லிவிட்டு, விளக்கம் கொடுக்க வாய்ப்பளிக்காமல், நான் பேசியதைத் திரித்து, “Saravanan How can you say Kashmir is not a part of India” நான் “I said Was” என்று மறுத்து பதிலளித்தேன்.

இந்தியா சுதந்திரம் அடையும்பொழுது காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. அதன் பின்னரே ராஜா ஹரிசிங், இந்தியாவுடன் சில நிபந்தனைகளோடு இணைந்துகொள்ள ஒரு ஒப்பந்தம் போடுகிறார். அதனை காஷ்மீர அரசியல் நிர்ணய சபை ஒப்புக்கொண்ட பின்னர் 1956-ம் ஆண்டு, காஷ்மீர் அரசியல் சட்டத்தின் 3ஆவது ஷரத்தின் படி “3. State of Jammu and Kashmir is and shall be an integral part of the Union of India.”.

காஷ்மீரத்துப் பிரச்சினையை வரலாறு அறியாமல் பேச முடியாது. இந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் விதமாகத்தான் “Kashmir was never an integral part of India” என்று சொன்னேன். அதன் பின்னர் அந்த விவாதத்தில் மேற்சொன்ன கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல், தொடர்ந்து கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன். சுமார் 16 நிமிடங்கள் அந்த விவாதத்தில் பங்கு பெற்றேன்.

சமூக வலைதளங்களில் பாஜகவினர், பாதியில் வெளியேறிய திமுக வழக்கறிஞர் சரவணன் என போட்டோ ஷாப் செய்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான் ஏதோ காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என சொன்னது போல பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது பாஜக. முழு வீடியோவையும் வெளியிடாமல், வெட்டியும், ஒட்டியும் வழக்கம்போல் இறங்கியுள்ளனர்.

அந்த விவாதத்தில் “Kashmir was never an integral part of India” என்று சொன்ன அடுத்த நொடி அர்னாப் கோஸ்வாமி, என்னைப் பேசவிடாமல், மற்றவர்களோடு சேர்ந்து கூச்சல் இடுகிறார். பேசியதை திரித்து “How can you say Kashmir is not an integral part of India” என்று “was” என்று சொன்னதை “is” எனத் திரிக்கிறார். விளக்கம் சொல்ல விடாமல் மற்ற பாஜகவின் பங்கேற்பாளர்கள், கூச்சல் போட்டு பேச விடாமல், தொடர்ந்து கடும் வார்தைகளால் தாக்கினர்.

விளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் அதே கேள்வியைத் திரித்துக் கேட்டதால் “உங்களின் பலியாடு நான் அல்ல” என்று வெளியேறினேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தேசபக்தி பாடத்தை எங்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய-சீனா போரின்போதும், இந்திய-பாகிஸ்தான் போரின்போதும், கார்க்கில் போரின் போதும் நாங்கள் தாய் நாட்டின் பக்கம் நின்று, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நிதியுதவி செய்தோம்” என்று உரையாற்றினார்.

திமுக தொண்டனாகிய நானும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக எந்தவொரு கருத்தையும் அந்நிகழ்ச்சியில் பதிவு செய்யவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன்”.

இவ்வாறு வழக்கறிஞர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

45 mins ago

ஜோதிடம்

48 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்