வரலாற்று பிரசித்தி பெற்ற தனுஷ்கோடியில் 53 ஆண்டுகள் கழித்து மீண்டும் தபால் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த தனுஷ்கோடி துறைமுகம், அதனருகே ரயில்வே நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் நீலவர்ணத்தில் கடலும் இதமான காற்றும், தேனியைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் இதுதான் தனுஷ்கோடி பழைய அடையாளம்.
1961-ம் ஆண்டு தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடியில் தனுஷ்கோடியில் 3,197 மக்கள் வசித்தாகவும் இங்கிருந்து பருத்தித் துணிகள், பித்தளை, அலுமினியம், கருவாடு, முட்டை, காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
1964-ம் ஆண்டு டிசம்பர்-22 அன்று பாக்ஜலசந்தி கடற்பரப்பை தாக்கிய கோரப்புயலில் இரவோடு இரவாக தனுஷ்கோடி துறைமுகத்தை கடல் இந்திய தேச வரைப்படத்திலிருந்து துடைத் தெறிந்தது. தனுஷ்கோடியில் இருந்த துறைமுகக்கட்டிடம், பாஸ்போர்ட் அலுவலகம், ரயில் நிலையம், தபால் நிலையம், மாரியம்மன் கோயில், தேவாலயம், முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் இடிந்து தரை மட்டமாயின. இந்த புயலில் தனுஷ்கோடியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஜலசமாதி ஆகினர்.
53 ஆண்டுகள் கழித்து தபால் நிலையம்
தனுஷ்கோடியை புயல் தாக்கி 53 ஆண்டுகள் ஆனநிலையிலும் பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடம் என முத்திரை குத்தப்பட்டு , மின்சாரம், மருத்துவம், குடிநீர் என எவ்விதமான அடிப்படை வசதிளும் இல்லாமல் முன்னூறுக்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு புதியதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு திறக்கும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து 53 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனுஷ்கோடியில் புதன்கிழமை தபால் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
ராமேசுவரம் கிழக்கு என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள தபால் நிலையம் தனுஷ்கோடி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கும். புதன்கிழமை நடைபெற்ற தபால் நிலைய திறப்பு விழாவிற்கு கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் தலைமை வகித்தார். துணை கோட்ட கண்காணிப்பாளர்கள் விஜய கோமதி, துளவிதாஸ், ராமேசுவரம் அஞ்சலக அலுவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார். புயலுக்கு முன்னர் தனுஷ்கோடியில் இயங்கிய தபால் நிலையத்தில் பணியாற்றிய குருசாமி புதிய தபால் நிலையத்தை துவங்கி வைத்தார்.
கடந்த 01.3.1914 அன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் நுழைவு வாயிலாக ஆங்கிலேய ஆட்சியில் தனுஷ்கோடி துறைமுகம் திறக்கப்பட்ட போது தனுஷ்கோடியில் தபால் நிலையமும் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இலங்கையில் இருந்து அனுப்பப்படும் அனைத்து தபால்களும் கப்பல் மூலம் தனுஷ்கோடி வந்த பிறகு இங்கிருந்த தபால் நிலையம் மூலம் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் அவை பிரித்து அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
இந்தியா
20 mins ago
ஆன்மிகம்
38 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
சினிமா
3 hours ago