“தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி இருந்தும் அதிமுக அரசு மீது அதிருப்தி ஏற்படுத்த, சதி திட்டம் மூலம் செயற்கை மின் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நாச வேலையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று திருநெல்வேலியில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது:
கடந்த 34 மாத அதிமுக ஆட்சியில் 32 பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில், தமிழகத்தில் 26,122 தொழிற்சாலைகள் இருந்தன. இந்த எண்ணிக்கை 2013-ம் ஆண்டு மார்ச்சில் 40,352 தொழிற்சாலைகளாக உயர்ந்துள்ளன. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில், 17 சதவீதம் தமிழகத்தில் உள்ளது.
தி.மு.க. காரணம்
1991-96 மற்றும் 2001-06-ல் நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, மின் விநியோகம் சீராக இருந்தது. மின் உற்பத்தி உபரியாக இருந்தது. 2006 - 2011 வரையான தி.மு.க. ஆட்சியில் மின் நிலைமை மோசமானது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டது. இதனால் 2008-ல் மின் பற்றாக்குறை அதிகரித்தது.
மின் வாரியத்துக்கு ரூ. 50,000 கோடி கடன் ஏற்பட்டது. தமிழக மின் வாரியத்துக்கு கடன் வழங்கக் கூடாது என இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
4,000 மெகாவாட் அதிகரிப்பு
2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது மின் பற்றாக்குறையைப் போக்குவதை சவாலாக எடுத்து, பகீரத முயற்சியில் ஈடுபட்டு மின் வாரிய கடன்களை அடைத்து, மின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தேன்.
திமுக ஆட்சியில் 8,000 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, தற்போது, 12,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. மின் பற்றாக்குறை இல்லை. ஜூலை, ஆகஸ்டில் மின் உற்பத்தி சீர் செய்யப்பட்டது. இதை சாதனையாக சட்டப் பேரவையில் அறிவித்தேன்.
சதி திட்டம்
மின் பற்றாக்குறை இல்லாத நிலையில், மின் நிலையங்களில் பழுது ஏற்பட்டதாக கூறினர். உடனுக்குடன் பழுது சீர் செய்யப்பட்டபோதும், சில நாட்களில் வேறொரு மின் உற்பத்தி நிலையம் பழுதுபட்டது.
மக்களவைத் தேர்தல் வேளையில், சதித் திட்டம் மூலம் மின் உற்பத்தி நிலையங்களில் பழுதுபட்டதாக கூறி, செயற்கையாக மின் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிமுக அரசு மீது மக்கள் அதிருப்தியடைய வேண்டும் என திட்டமிடப்படுகிறது. இந்த சதி, நாச வேலைகளில் ஈடுபடுவோரை இனம் கண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுலா
4 hours ago