மெரினா கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் நடத்திய 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அடையாறு பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை கல்லூரி மாணவர்கள் சிலர் சனிக் கிழமை இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிள் ரேஸ் நடத்தினர். இந்த ரேஸில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்றனர். மோட்டார் சைக்கிளின் கடுமையான சத்தத்தை கேட்டு, சாலையில் சென்றவர்கள் மிரண்டனர். பந்தய தூரத்தில் இருந்த 4 சிக்னல்களையும் மதிக்காமல் மின்னல் வேகத்தில் 3 மோட்டார் சைக்கிள்களும் பறந்தன.
இதைப் பார்த்து எரிச்சலைடைந்த சிலர் காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதுபோல் சிக்னல்களில் இருந்த போக்குவரத்து காவல் துறையினரும் அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக காவல் ஆய்வாளர் ரவிக்குமரன் தலைமையில் வந்த காவல் துறையினர், மோட்டார் சைக்கிள் ரேஸ் நடத்தியவர்களைப் பிடிக்க உடனடியாக களத்தில் இறங்கினர்.
பந்தய மோட்டார் சைக்கிள்களை பின்தொடர்ந்து ஒரு ஜீப், 2 மோட்டார் சைக்கிள்களில் காவல் துறையினர் சென்றனர். சாந்தோம் அருகே சாலையை கடந்த ஒரு இளைஞர் மீது ஒரு பந்தய மோட்டார் சைக்கிள் மோதியது. மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு மாணவர்கள் கீழே விழுந்தனர். அவர்களைப் பின் தொடர்ந்து வந்த காவல் துறையினர் பந்தயம் நடத்திய அனுப்குமார் (வயது 19), சசிகுமார் (20) இருவரையும் கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் மோதிய இளைஞருக்கு கால் முறிந்து விட்டது.
அதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்திய யஷ்வந்த் ராஜா (19), ஜெயம் (18), யோகேஷ்வரன் (18), யோகேஷ் (19) ஆகிய நான்கு பேரையும் கலங்கரை விளக்கம் அருகே வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் பந்தயத்துக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து ‘தி இந்து’விடம் கூறிய காவல் துறையினர், “பந்தயத்தில் வெற்றி பெறும் நபருக்கு தோற்ற இருவரும் தலா ரூ.1000 கொடுக்க வேண்டும். இதுதான் இவர்களின் பந்தய தொகை. இதற்காக அவர்கள் தங்கள் உயிரையும், சாலையில் செல்லும் அப்பாவி பொதுமக்களின் உயிரையும் பணையம் வைத்து அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டுகின்றனர். மாணவர்கள் செய்யும் தவறுக்கு அவர்களின் பெற்றோரும் ஒரு காரணம்.
மோட்டார் சைக்கிள் ரேஸ் நடத்துபவர்கள் மீது 302-வது பிரிவு கொலை வழக்கிற்கு சமமான 279, 337, 308 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி மாணவர்கள் 6 பேர் மீதும் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக 308-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago