முடிமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் பலியானது தொடர்பான வழக்கில், தமிழகத்தில் தனியார் அழகு சாதன சிகிச்சை மையங்களுக்கான பிரத்யேக சட்டத்தை கடந்த 19 ஆண்டுகளாக அமல்படுத்தாதது ஏன்? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மாநில அரசு செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏஆர்ஹெச்டி என்ற தனியார் முடிமாற்று சிகிச்சை மையம் உள்ளது. இதில் சென்னை மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு படித்த டாக்டர் சந்தோஷ்குமார்(22) கடந்த மே 15-ம் தேதி சிகிச்சை மேற்கொண்டார். அன்பிறகு 2 நாட்களில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மரணமடைந் தார். இதனால் இந்த முடிமாற்று மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அந்த மையத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த சீலை அகற்றக்கோரி ஏஆர்ஹெச்டி சிகிச்சை மையத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
தமிழ்நாடு தனியார் சிகிச்சை மைய நிறுவன ஒழுங்குமுறை சட்டம் 1997-ல் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தின் கீழ் தற்போதைய அரசும், இதற்கு முன்பு இருந்த அரசும் போதிய விதிகளை வகுக்காததால், கடந்த 19 ஆண்டுகளாக அந்த சட்டமே அமலுக்கு வராமல் உள்ளது. தற்போது புதிது புதிதாக அழகு நிலையங்கள், முடிமாற்று சிகிச்சை மையங்கள் முளைத்து வருகின்றன. அவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிதாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். அல்லது ஏற்கனவே உள்ள சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் வகையில் புதிய விதிகளை வகுக்க வேண்டும். எனவே இந்த வழக்கில் மத்திய உள்துறை மற்றும் சட்டத்துறை, தமிழக சட்டத் துறை, சுகாதாரத் துறை ஆகியவற்றின் செயலர்களை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக இந்த நீதிமன்றம் சேர்க்கிறது.
தமிழகத்தில் 1997-ம் ஆண்டே தனியார் சிகிச்சை மையங்கள் நிறுவன ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டும் இதுநாள்வரை அந்த சட்டத்தின் கீழ் ஏன் விதிகள் வகுக்கப்படவில்லை?. இதுதொடர்பாக மத்திய அரசு கடந்த 2010-ல் சட்டம் கொண்டு வந்தும், அதை ஏற்று ஏன் மாநில அரசு சட்டபேரவையில் தீர்மானம் கொண்டு வரவில்லை?. கர்நாடகாவில் முடிமாற்று சிகிச்சை மையங்கள், ஸ்பா, சலூன்கள் உள்ளிட்ட அழகு சிகிச்சை மையங்களுக்கு தனிச்சட்டம் இருப்பது போல தமிழகத்தில் ஏன் கொண்டு வரவில்லை? எப்போது மாநில அரசு இதுதொடர்பாக சட்டம் இயற்றும்? அல்லது மத்திய அரசின் சட்டத்தைப் பின்பற்றும்?
மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்றியதோடு அதன் கடமை முடிந்து விட்டதா?. சிக்கிம், இமாச்சல பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், மிசோராம் ஆகிய 4 மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களில் அந்த சட்டம் ஏன் பின்பற்றப்படவில்லை என எதற்காக கேள்வி எழுப்பவில்லை? மத்திய அரசு இதில் எங்களுக்கு பொறுப்பு கிடையாது என தட்டிக் கழிக்க முடியுமா? இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உயர் மட்டக் குழுக்களை அமைக் காதது ஏன்?. தமிழகத்தில் கவனக் குறைவாக செயல்பட்ட சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட அழகு சாதன நிறுவனங்கள் மீது இதுவரை எத்தனை புகார்கள் வந்துள்ளன? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் என்ன? என்பது குறித்து தமிழக சுகாதார மற்றும் சட்டத்துறை செயலர்கள் வரும் செப்டம்பர் 19-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
12 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
30 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
கார்ட்டூன்
3 hours ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago