பருவநிலை மாற்றம் தொடர்பாக இத்தாலி நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்தியுள்ளார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஏ.சிவச்சந்திரன்.
தட்பவெட்ப நிலையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களின் விளைவாக பருவ மழை குறைவு, வெப்பம் அதிகரித்தல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே இன்டர்நேஷனல் சென்டர் பார் தியோரெடிக்கல் பிசிக்ஸ் என்ற நிறுவனம் கடந்த மாதம் இத்தாலியில் ஏற்பாடு செய்திருந்த ‘10 ஆண்டுகளில் தட்பவெட்ப நிலை மாற்றம் மற்றும் எதிர்கால கணிப்பு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று உரை நிகழ்த்தி திரும்பியுள்ளார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கடல்சார் அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வரும் மாணவர் ஏ.சிவச்சந்திரன்.
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி அழகுதுரையின் மகன் இவர். கடந்த 3 ஆண்டுகளாக பேராசிரியர் யோகானந்தன் வழிகாட்டுதலுடன் கடந்த கால தட்பவெட்ப நிலை (Paleo Climate) குறித்து சிவச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து சிவச்சந்திரன் ‘தி இந்து’விடம் கூறியது: பழமையை அறிந்துகொண்டால் எதிர்காலத்தை கணிக்கலாம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த ஆய்வை நான் மேற்கொண்டேன்.
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை தான் தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தண்ணீரை தருகிறது. இங்கு பெய்யும் மழையில் பெரும்பகுதி பல்வேறு ஆறுகள் வழியாக அரபிக்கடலில் சென்று கலந்துவிடுகின்றன.
பருவநிலை மாற்றம் காரணமாக குறைந்த காலத்தில் அதிக மழைப் பொழிவு, மழையே இல்லாமை அல்லது வெப்பக் காற்று உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடல் பரப்பில் நிலவும் வெப்பம் தான் நிலப்பகுதியில் நிலவும் தட்பவெட்ப நிலையை தீர்மானிக்கிறது.
எனவே, கடந்த 10,000 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை எந்த அளவுக்கு பெய்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக அரபிக்கடலின் தென் கிழக்குப் பகுதியில் 500 மீட்டர் ஆழத்தில் பிரத்யேக டிரில் மூலம் போர் செய்து 6 அடி அளவுக்கு மணல் படிமங்களைச் சேகரித்தேன். சேகரிக்கப்பட்ட மணல் படிமங்களை ஆய்வகத்துக்கு கொண்டு வந்து அதிலுள்ள நுண்ணுயிர்கள், அதன் வாழ்வாதாரச் சூழல், வெப்ப நிலை, உப்புத் தன்மை ஆகியவற்றைக் கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தட்பவெட்ப நிலை குறித்த புள்ளி விவரங்களைச் சேகரித்தேன். இந்த ஆய்வின் முடிவுகள் குறித்துதான் இத்தாலியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினேன்.
பல்வேறு நாடுகளிலிருந்து விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 157 பேர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். அமெரிக்கா மேரிலாண்ட் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் மைய ஆராய்ச்சியாளர் முனைவர் கெல்லி ஹலிமெடா கில்போர்ன், தங்களது பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பயிலரங்கில் பங்கேற்க தன்னை அழைத்துள்ளார் என்றார் சிவச்சந்திரன் பெருமையுடன்.
இதுகுறித்து பேராசிரியர் யோகானந்தன் கூறியபோது, “இந்த ஆய்வில் மீதமுள்ள பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும், அதன் பிறகு பருவநிலை மாற்றத்தைச் சரி செய்வதற்கான மாதிரிகளைத் திட்டமிடுவதற்கும், ஆராய்ச்சிகளுக்கும், எதிர்காலத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான கணிப்புகளுக்கும் இது பேருதவியாக இருக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
29 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago