தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்றால், முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் ராயபுரத்தில் திங்கள்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அவர் பேசியது:
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தோற்கடிப்பது எங்கள் வேலையல்ல; இனிமேல் அவர் தேர்தலில் நிற்கவே கூடாது என்ற எண்ணத்தை வர வைப்பதுதான் வேலை. 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறுகிறது காங்கிரஸ். ஆனால் 10 ஆண்டு கால ஆட்சியில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது? பல லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். காங்கிரஸ் இருக்கும் வரை இந்தியா வளராது.
சாதி, மதத்திலிருந்து சமூகம் விடுதலை அடைய வேண்டும்; அதை இந்தியா இன்னும் பெறவில்லை. வர்க்க, பெண்ணிய, பொருளாதார விடுதலை பெறுவதுதான் நாட்டின் உண்மையான விடுதலை. கருணாநிதி ஆட்சிக்கு வந்தபின்தான் குடும்ப அரசியலை கொண்டு வந்தார்; ஆனால் விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போதே குடும்பத்துடன் வந்துள்ளார். சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு என்று தனி தொகுதி வேண்டும்.
இலங்கை இனப்படு கொலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்; அதற்கு தி.மு.க. துணை நின்றது. இந்தத் தேர்தலில் காங்கிரசையும், தி.மு.க.-வையும் வீழ்த்த வேண்டும். டெல்லியில் மாணவி கற்பழிக்கப்பட்டபோது வருந்திய ராகுல்காந்தி, இலங்கையில் இசைப்பிரி யாவின் மரணத்துக்கு ஏன் வருந்தவில்லை?
தாய்மொழி, தாய்நாடு, நதிகளுக்கு கங்கை, யமுனை, சிந்து, கோதாவரி, காவேரி என்று பெண்களின் பெயரை சூட்டிய பெருமை மிக்க இந்த நாட்டில், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு பெற முடியாத நிலை உள்ளது. தனி தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்; இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலைக்கு காரணமாக இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்றால், இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் வேண்டும்.
அதற்கு நாம் அனைவரும் இணைந்து ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 min ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago