மீண்டும் ‘முருங்கை மரம் ஏறும்’ ஆட்டோ கட்டணம்: 6 மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்வு

By செய்திப்பிரிவு

ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்த பிறகு, கடந்த 6 மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்ந்துள்ளது. இதைக் காரணம் காட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது மக்களை மீண்டும் அதிருப்தியடைய வைத்திருக்கிறது.

சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கி.மீ.க்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய ஆட்டோ கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்தது. ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) தொழில்நுட்ப வதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்ய தொடங்கியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியூசி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறியதாவது:

டிஜிட்டல் மீட்டர் வழங்கவில்லை

ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயித்த பிறகு, இதுவரை பெட்ரோல் விலை ரூ.12 உயர்ந்துள்ளது. இந்நிலையில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வைத்து ஆட்டோ தொழிலாளிகள் எப்படி வாழ்க்கை நடத்துவது? மேலும், பிப்ரவரி இறுதிக்குள் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இன்னும் வழங்கப்படவில்லை. 3 அல்லது 6 மாதத்துக்கு ஒருமுறை எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்றவாறு கட்டணத்தை மாற்றியமைக்க முத்தரப்பு கமிட்டியும் அமைக்கப்படவில்லை.

செலவு கட்டுபடியாகவில்லை

இதனாலேயே, செலவை ஈடுசெய்ய முடியாமல் ஓட்டுநர்கள் சிலர் மீண்டும் பழைய நிலைக்கு மாற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு போக்குவரத்து துறையின் மெத்தனப் போக்குதான் காரணம்.

தேர்தல் கூட்டங்கள் புறக்கணிப்பு

தமிழகம் முழுவதும் 5 லட்சம் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், எந்த அரசியல் கட்சியும் ஆட்டோ தொழிலாளர்கள் நலன் குறித்து தேர்தல் அறிக்கையில் எதுவும் கூறவில்லை. இவற்றைக் கருத்தில் கொண்டு தேர்தல் பிரச்சாரம், பொதுக் கூட்டங்களுக்கு ஆட்டோக்களை இயக்குவதில்லை என ஆட்டோ தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு சேஷசயனம் கூறினார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சடகோபன் கூறியதாவது:

ஆரம்பத்தில் போக்குவரத்து துறை, போலீஸ் கெடுபிடி அதிகம் இருந்ததால், மீட்டர்கள் போட்டு நிர்ணயிக்கப்பட்ட ஆட்டோ கட்டணத்தை வசூலித்தனர். இப்போது ரயில் நிலையங்கள், பஸ் நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில்கூட, முறையாக மீட்டர் போட்டு கட்டணம் வசூலிப்பதில்லை. பேரம் பேசிதான் கட்டணத்தை கேட்கின்றனர். கேட்டால், பெட்ரோல் விலை உயர்வைக் காரணம் காட்டுகின்றனர். ஆனால், சில ஆட்டோக்களில் எப்போதும் மீட்டர் மட்டுமே போட்டு தெளிவாக ஓடவிடுகின்றனர்.

மக்கள் அதிருப்தி

கட்டணத்தை அவ்வப்போது மாற்றி அமைக்க முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்துள்ளனர். அரசு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே மீண்டும் பழைய நிலைக்கே கட்டணம் வசூலிப்பது எந்த அளவுக்கு நியாயம்? இதனால் சமீபகாலமாக மக்கள் மீண்டும் அதிருப்தி அடைந்துவருகின்றனர். மக்கள் நலத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் புறக்கணிக்கக் கூடாது. முறைப்படுத்தாமல் இயக்கும் டாடா மேஜிக், அபே போன்ற வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சடகோபன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்