ரூ.1250 கோடி வழங்க தமிழக அரசு ஒப்புதல்: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் போட வலியுறுத்தி இவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தில் 50 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டும், போக்குவரத்து இழப்பை அரசு ஏற்க வேண்டும், மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக நிர்வாகத்துடன் நடந்த 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மே 15 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாஸ்மின் பேகம் முன்னிலையில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

அதன்பிறகு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், 15-ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம், 14-ம் தேதி மாலையே தொடங்கியது. பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலை முதல் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்தது. பெரும்பாலான ஊழியர்கள் பேருந்துகளை இயக்க வரவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் முடங்கின. தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்களை வைத்து குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. சில இடங்களில் கூடுதலாக தனியார் பேருந்துகள், வேன்கள் இயக்கப் பட்டன. அரசுப் பேருந்துகளுக்காக காத்திருந்த பொதுமக்கள், வேறு வழியின்றி தனியார் பேருந்துகள், வேன், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் கூடுதலாக கட்டணம் கொடுத்து பயணம் செய்தனர்.

இதற்கிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அரசுத் தரப்பில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இன்றும் போக்குவரத்து வேலைநிறுத்தம் நடைபெற்று வந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,250 கோடி நிலுவைத்தொகை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகை செப்டம்பர் மாதத்தில் தரப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.

முதல்வர் ரூ.1,250 கோடி நிதி ஒதுக்க ஒப்புக்கொண்டார்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ''முதல்வரின் அறிவுரைப்படி ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கினோம். நெருக்கடி நிலையிலும் முதல்வர் ரூ.1,250 கோடி நிதி ஒதுக்க ஒப்புக்கொண்டார். நிலுவைத் தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும். வரும் 24-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்'' என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 secs ago

விளையாட்டு

2 mins ago

இந்தியா

3 mins ago

இந்தியா

5 mins ago

சினிமா

8 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

15 mins ago

தொழில்நுட்பம்

19 mins ago

தமிழகம்

48 mins ago

கல்வி

50 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

51 mins ago

மேலும்