தமிழகத்தில் நீட் தேர்வு முறையை அமல்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு முறையை அமல்படுத்த முயற்சி செய்த ஆரம்பம் முதலே தமிழகத்திற்கு இத்தேர்வு முறை வேண்டாம் என்று தமிழக மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக தமிகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு பெற்றுத்தர குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தவறிவிட்டது. மேலும் தமிழக அரசும் இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுக்கவில்லை.
இச்சூழலில் மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் நீட் தேர்வு முறைக்கு விலக்கு அளிக்க முடியாது என்று அறிவித்திருக்கிறது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, குழப்பத்திலும் உள்ளனர்.
தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வராத நீட் தேர்வு முறையை மத்திய அரசு எதற்காக திணிக்கிறது. மாநில உரிமையையும், மாநில அரசின் கோரிக்கையையும், மாநில மக்களின் விருப்பத்தையும் ஏற்க மறுக்கும் பிடிவாத செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபடக்கூடாது.
குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் கீழ் நீட் தேர்வு முறை நடைபெறும் போது தமிழக மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். இதனையெல்லாம் மத்திய அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது கேள்விக்குறியே.
மேலும் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கல்வி கற்கின்ற மாணவ, மாணவிகள் குறிப்பாக கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கல்வி கற்கின்ற ஏழை மாணவர்கள் நலன் கருதி தமிழகத்திற்கு நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு பெற்றுத்தர தமிழக அரசு உடனடியாக விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு தமிழகத்தில் நீட் தேர்வு முறையை அமல்படுத்தக் கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த ஆண்டே தமிழக மாணவர்கள் முக்கியமாக ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து கல்வி கற்பதற்கு ஏற்கெனவே நடைமுறையில் பின்பற்றப்பட்டதையே கடைப்பிடித்து மாணவர்கள் நலன் காக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago