மதுரை அலங்காநல்லூரில் நேற்று இரண்டாவது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடையடைப்பு, சாலைகளில் கற்களை அடுக்கி கம்புகளை கட்டி அடைத்து பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, வாடிவாசலில் இருந்து பேரணியாக புறப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
அலங்காநல்லூரில் நேற்று முன்தினம் சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர். நேற்று காலை வரை தொடர்ந்து 21 மணி நேரமாக விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 227-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். காளைகளை அவிழ்த்துவிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட 32 பேர் மட்டும் பிறகு விடுவிக்கப்பட்டனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யக் கோரி நேற்று நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட உள்ளூர் பெண்கள் | படம்:எஸ்.ஜேம்ஸ் |
அனைவரையும் விடுவிக்கக் கோரி நேற்று காலை 7 மணி முதல் அலங்காநல்லூர் தனிச்சியம் சாலையில் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்ல செல்ல திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும், நேற்று முன்தினம் கலைந்து சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அலங்காநல்லூரில் திரள தொடங்கினர். அவர்கள், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், கைது செய்த மாணவர்களை விடுவிக்க வேண்டும், அடுத்த ஆண்டு அனுமதி பெற்று தருவோம் என சமாளிக்காமல் இந்த தை மாதத்துக்குள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அப்போது எஸ்பி, கைது செய்தவர்களை விடுவிக்கிறோம், உச்ச நீதிமன்ற தடையிருப்பதால் சாத்தியமில்லாததை செயல்படுத்த முடியாது, எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்’’ என்றார். இந்த சமரசத்தை ஏற்க மறுத்து போராட்டக்காரர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை அலங்காநல்லுாரியில் சாலையின் நடுவில் கற்களை அடுக்கி நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் செல்லாதவாறு போக்குரவத்துக்கு தடை விதித்த இளைஞர்கள். |
இளைஞர்கள், மாணவர்கள் சாலைகளின் நடுவே கற்களை அடுக்கியும், கம்புகள், கயிறு கட்டியும் சாலையை மறித்தனர். இதனால், அலங்காநல்லூருக்கும், மதுரை மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கும் ஒட்டுமொத்த போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சர்வதேச கவனம்
வெளிநாடு வாழ்நாள் தமிழர்கள், போராட்டத்தில் பங்கேற்ற தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் அலங்காநல்லூர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக், ட்விட்டரில் நிமிடத்துக்கு நிமிடம் தங்கள் ஆதரவு கருத்துகளை பதிவிட்டதால் அலங்காநல்லூர் போராட்டம் தமிழகத்தைத் தாண்டி சர்வதேச கவனத்தை ஈர்த்தது.
மதியம் 2-ம் கட்டமாக போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம், உங்கள் கோரிக்கையை ஏற்று நாங்கள் கைது செய்தவர்களை விடுவிடுத்துவிட்டோம் என்றனர். அதற்கு பொதுமக்கள், அவர்களை எப்படி இங்கிருந்து கைது செய்து அழைத்து சென்றீர்களோ அதுபோல் இங்கு அழைத்து கொண்டு வந்துவிடுங்கள் என்றனர். இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடிக்கிறது.
அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே நேற்று நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் உள்ளிட்டோர் | படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
ஒருவர் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை கிராமத்தில் மஞ்சு விரட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. அதை பார்க்க வந்திருந்த, ஆலங்காயம் அடுத்த வெப்பாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்(40) என்பவரை காளை மாடு முட்டி வீசியது.வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
தொழில்நுட்பம்
15 mins ago
இந்தியா
4 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago