மதுரை ய.ஒத்தக்கடை அரசு தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு குவிந்த பெற்றோர்: சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளி மாணவர்களும் சேர்ப்பு

By பாரதி ஆனந்த்

மதுரை ய.ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் குவிந்தனர். சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகளிலிருந்து 25 மாணவர்கள் அரசுப் பள்ளியில் வந்து சேர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக மதுரை ய.ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.தென்னவனிடம் பேசியபோது, "தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. எங்கள் பள்ளியில் நேற்று மாணவர் சேக்கை களை கட்டியது. காலை 8.30 மணி தொடங்கி மாலை 3.30 மணி வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மொத்தம் 100 மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு பள்ளியின் மாணவர் பலம் 500 என இருந்தது. இந்த ஆண்டு மாணவர்கள் பலம் 600 என உயரும் என எதிர்பார்க்கிறோம்.

தனியார் பள்ளிகளில் குறிப்பாக சிபிஎஸ்இ, மெட்ரிக் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 25 பேர் நேற்று எங்கள் பள்ளியில் வந்து சேர்ந்தனர்.

எங்கள் பள்ளியில் 50 மரங்கள் இருக்கின்றன. பள்ளியின் கட்டமைப்பு தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருக்கிறது. குடிநீர் வசதி, கழிவறை வசதி, கணினி வகுப்புகள் என எல்லா வசதிகளும் சிறப்பாக உள்ளன.

அது தவிர பள்ளி மேலாண்மைக் குழுவும் பெற்றோர் ஆசிரியர் கழகமும் மாதந்தோறும் கூட்டம் நடத்தி பள்ளி மேம்பாடு குறித்து ஆலோசித்து அமல்படுத்துகிறோம்.

தமிழ், ஆங்கில வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்துகிறோம். யோகா, சிலம்பம், கணினி என சிறப்பாசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொடையாளர்கள் மூலம் நிதி திரட்டி சம்பளம் அளிக்கிறோம்.

எங்கள் பள்ளியில் கணினி வகுப்பறையில் வெறும் கணினி பாடம் மட்டுமே சொல்லித்தருவதில்லை. அங்கே, பாடப்புத்தகத்திலிருக்கும் பாடங்களை டிஜிட்டலைஸ் செய்து உற்சாகமாகக் கற்றுக் கொடுக்கிறோம்.

பள்ளியில் மொத்தம் 18 ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பள்ளியின் வளர்ச்சிக்கு மாணவர்களின் திறன் வளர்ப்புக்கு பெரும் பங்காற்றுகின்றனர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இருக்கும் நாடக ஆசிரியர் பிரபாகர் மூலம், எங்கள் பள்ளியில் சிறார் நாடக பயிற்சி நடத்துகிறோம். ஒரு நாடகமும் அரங்கேற்றமானது. கல்வித்துறை சார்பில் தொடங்கவுள்ள தொலைக்காட்சியில் முதல் நிகழ்ச்சியாக இதுவே ஒளிபரப்பாகும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்திருக்கிறார்.

மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்க பிஎஸ்எல்வி / ஜிஎஸ்எல்வி என இரண்டு குழுக்களை செயல்படுட்டுவருகிறது. இவற்றின் விரிவாக்கம் boys school leading volunteers, girls school leading volunteers. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி இந்தியாவின் புகழை உலகறியச் செய்த மாதிரி இந்த மாணவர்கள் பள்ளியின் பெருமையை ஊரறியச் செய்யும் வகையில் தலைமைப் பண்புடன் இயங்க பழக்கப்படுத்தப்படுகின்றனர்.

மாணவர்களுக்கு சிவப்புத் தொப்பியும், மாணவிகளுக்கு சிவப்பு நிற ஸ்கார்ஃபும் கொடுத்துள்ளோம்.

 

 

 

 

மாணவர்களின் சீருடை ஒழுங்கை சோதிப்பது, தண்ணீர் வசதி, கழிவறை சுத்தம் ஆகியனவற்றை கண்காணிப்பது. மாணவர்கள் மதிய உணவை வீண் செய்யாமல் சாப்பிடுகிறார்களா என்பதை நெறிப்படுத்துவது, வகுப்பறை மேலாண்மை என பல்வேறு தலைமைப் பண்புகளுக்கும் பழக்கப்படுத்தப்படுகின்றனர்.

ஓர் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு இவ்வளவு தூரம் பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர் என்றால் தரம் தான் காரணம். கட்டிடம் தொடங்கி, மைதானம், ஆசிரியர்கள் என எல்லாவற்றிலும் தரத்தை நாங்கள் சமரசம் செய்யாமல் வளர்த்து முன்மாதிரி பள்ளியாகத் திகழ்வதில் எங்களுக்கு பெருமகிழ்ச்சியும் பெருமிதமும்.

கல்வி அரசுடைமையாக இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு எந்த வகையிலும் குறைவானது இல்லை என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெனிக்கட வேண்டும். எங்கள் பள்ளிக்கு நாங்கள் எப்போதுமே கேன்வாஸிங்குக்காக சென்றதில்லை. எங்களிடம் படித்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பரிந்துரைத்தே எங்கள் பள்ளிக்கு மாணவர்கள் குவிகின்றனர்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்