கர்நாடக அரசு ஜூன் மாதத்திற்குள் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய உரிய காவிரி நதிநீரைத் தர மறுப்பதை மத்தியஅரசு கண்டிப்பதோடு, தண்ணீரை திறந்துவிட வற்புறுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குள் திறந்துவிட வேண்டிய காவிரி நதிநீரைத் தர மறுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் ஜூன் மாதத்திற்குள் 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
குடிநீர் தட்டுப்பாடு
எனவே கர்நாடக அரசு இந்த உத்தரவை ஏற்றுத் தண்ணீர் திறந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் நிலவியது. ஆனால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கர்நாடக அமைச்சர் அறிவித்துள்ளார். இது ஏற்புடையதல்ல. ஏனென்றால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டால்தான் தமிழக மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. குறிப்பாகத் தமிழகத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் சுமார் 25 மாவட்டங்களில் உள்ள சுமார் 5 கோடி மக்களுக்கு காவிரி நதிநீர் வந்தால்தான் குடிக்க தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல்
மேலும் ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலியிருந்து கடந்த 7 ஆண்டுகளாகத் தண்ணீர் திறக்காத சூழலில் இந்த ஆண்டாவது தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று விவசாயிகளும், பொது மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இச்சூழலில் கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நதிநீரைத் திறக்காமல் இருப்பது தமிழக மக்களை வஞ்சிக்கின்ற செயலாகும்.
தொடர்ந்து 60 ஆண்டுகளாகத் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீரை உரிய காலத்தில், முறையாக, முழுமையாகத் திறக்க மறுத்து வரும் கர்நாடக அரசின் நடவடிக்கையை இனிமேலும் மத்திய மாநில அரசுகள் பொறுத்துக்கொள்ளாமல் தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அதாவது இப்பிரச்சனையில் காவிரி மேலாண்மை ஆணையமே நேரடியாகத் தலையிட்டு கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உடனடி நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசும், மத்திய அரசும் வலியுறுத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
44 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுலா
3 hours ago