பள்ளியை, பாடத்தை வெறுக்கும் குழந்தைகளை மனதை மாற்ற, அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளை கொண்டு பாடத்தை நடத்துவதன் மூலம் வகுப்பறையில் அவர்களை கட்டிப்போட்டு வருகிறார் ஓர் இளம் ஆசிரியர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி ஆசிரியர் தே. தாமஸ் ஆண்டனிதான் அவர். இப்பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு ஆசிரியராக பணியாற்றும் இவரின் வகுப்புகள் என்றால் மாணவர்களுக்கு அவ்வளவு விருப்பம். ‘பொம்மை சார் வந்திட்டாரு’ என வகுப்பறைக்கு வரும்போதே மகிழ்வாய் அவரை வரவேற்கின்றனர்.
ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இன்ன பிற கதைகளையும் பொம்மலாட்டம் மூலம் ருசிகரமாய் சொல்லி, பெரியவர்களையே கட்டிப்போட காரணமாய் அமைந்த இந்த கலை தற்போது மாணவர்களை மயக்கி வகுப்பறையில் அமர வைத்து வருகிறது.
இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டு வகுப்புவரை கடந்த ஆண்டு 46 பேர் படித்த நிலையில் இது தற்போது 70 ஆக உயர்ந்துள்ளது. இதில் 40 மாணவ, மாணவிகள் ஆதரவற்றோர் இல்லங்களை சேர்ந்தவர்கள். அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்து வரும் சூழலில், மாணவர்களை வசியப்படுத்த இது போன்ற புதிய முயற்சிகள் தேவை என பாராட்டுகின்றனர் சுற்றுவட்டார பொதுமக்கள்.
பொம்மலாட்ட பாடம் குறித்து தே. தாமஸ் ஆண்டனி கூறும்போது, மாணவர்கள் கல்வி கற்பதை எளிமையாக அரசு செயல்வழி கற்றல் முறையை செயல்படுத்திவருகிறது. இந்த முறையில் அட்டைகளில் ஒட்டப்பட்ட பொம்மைகளை கொண்டுவகுப்புகளை நடத்தி வந்தோம். நீண்ட நாட்களுக்கு அட்டைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில், இதை தொடர்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. குழந்தைகள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பொம்மைகளே ஹீரோக்களாக உள்ளன. இதனால், அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளை வைத்து பாடம் சொல்லித்தர முடிவு செய்தேன்.
பொம்மலாட்டம் நடத்துவது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கொண்டு கற்றுக் கொண்டேன். என்னிடம் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, தாத்தா என ஒரு குடும்ப உறவுமுறையை குறிக்கும் பொம்மைகள் உள்ளன. பாடங்களை உரையாடலாக, கேள்வி பதிலாக இந்த பொம்மைகள் பேசுகின்றன. குழந்தைகள், பெரியவர், பெண் குரல் என பல குரல்களில் பேசி பொம்மைகள் வாயிலாக வகுப்பறையில் பாடம் நடத்துகிறேன். குழந்தைகள் எளிதில் புரிந்து படங் களில் முழுக்க லயித்து விடுகின்றனர் என்றார்.
உதட்டை அசைக்காமல் பொம்மை கள் மூலம் பேசக்கூடிய கலையை தற்போது கற்று வருகிறார் தாமஸ். அவரது இந்த முயற்சிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை புவனா மற்றும் சக ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் பெரும் உதவியாய் இருந்து வருகின்றனர்.
ஆங்கிலத்தில் அதிகமாய் பயன்படும் 100 வார்த்தைகள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் என குழந்தை களை பல்திறன் கொண்டவர்களாக மாற்றி வருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள். ‘படித்து விட்டு என்ன வேலைக்கு செல்வாய்’ என்று கேட்டால் ‘பொம்மை சாரைபோல் ஆசிரியராவேன்’ என கோரஸ் போடுகின்றனர் குழந்தைகள்.
‘பூட்டை திறப்பது கையாலே... நல்ல மனதை திறப்பது மதியாலே... பாட்டை திறப்பது பண்ணாலே... இன்ப வீட்டை திறப்பது பெண்ணாலே...’ பாரதியின் பாடல் வரிகள் பள்ளியை விட்டு வரும்போது மழலைத் தமிழில் மயக்கி ஒலிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
8 hours ago
தமிழகம்
3 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago