பரமத்திவேலூர் அருகே சோகம்: காவிரி ஆற்றில் 6 பேர் மூழ்கினர்; 5 பேரின் உடல்கள் மீட்பு- சிறுமியைத் தேடும் பணி தீவிரம்

By கி.பார்த்திபன்

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் நீரில் மூழ்கினர். இதில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தையை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் கொடிக்கம்பம் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). அதே பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். அவருக்கு ஜோதிமணி (40) என்ற மனைவியும், தாரகேஷ் (10), தீபகேஷ் (10) என்ற இரட்டை குழந்தைகளும் இருந்தனர். நேற்று காலை சரவணன், தனது குடும்பத்துடன் வீட்டருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார். அவர்களுடன், சரவணனின் அண்ணன் தனசேகரின் மகன் ரோகித் (14) மற்றும் ஜோதிமணியின் தோழியான தேவிஸ்ரீ (33), அவரது மகள் அஸ்விதா (8) ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர்.

வறட்சியால் ஆற்றின் ஒரு பகுதியில் மட்டுமே தண்ணீர் செல்கிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள காகித ஆலை ஒன்றின் நீர் உந்து நிலையத்தை ஒட்டிய பகுதியில் மட்டும் தண்ணீர் செல்கிறது. எனவே, அங்கு குளிப்பதற்காக சரவணன் உட்பட 7 பேரும் சென்றுள்ளனர். காலை உணவும் எடுத்துக் கொண்டு சென்று அங்கேயே சாப்பிட்டு வர திட்டமிட்டிருந்தனர். குளிக்கும் இடம் சென்றதும் ஜோதிமணி முதலில் ஆற்றில் இறங்கியதாகத் தெரிகிறது.

அவர் ஆற்றில் இறங்கிய இடம் காகித ஆலைக்கு தண்ணீர் எடுப்பதற்காக வெட்டப்பட்ட கால்வாய் இருந்த இடம் என்பதால் ஆழம் அதிகமாக இருந்தது. தவிர, அப்

பகுதியில் தண்ணீரின் வேகமும் அதிகமாக இருந்ததால், தண்ணீரில் இறங்கிய வேகத்தில் அவர் நீரில் மூழ்கியுள்ளார். இதைக் கண்ட சரவணன் அவரை மீட்க தண்ணீரில் இறங்கியுள்ளார். அவரும் தண்ணீரில் மூழ்கியதையடுத்து அவர்களை காப்பாற்ற தோழி தேவிஸ்ரீ, தாரகேஷ், தீபகேஷ் மற்றும் மகன் அஸ்விதா ஆகியோரும் அடுத்தடுத்து தண்ணீரில் இறங்கினர்.

ஆற்றின் ஆழம் மற்றும் தண்ணீரின் வேகம் அதிகம் இருந்ததால் அனைவரும் நீரில் மூழ்கினர். தண்ணீரில் இறங்கிய அனைவரும் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த சரவணனின் அண்ணன் மகன் ரோகித், நடந்த சம்பவம் தொடர்பாக உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு உறவினர்கள் விரைந்து வந்தனர். உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பரமத்தி வேலூர் மற்றும் திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினர், கிராம மக்கள் உதவியுடன் சரவணன், ஜோதிமணி, தாரகேஷ், தீபகேஷ் மற்றும் தேவிஸ்ரீ ஆகிய 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டனர். அஸ்விதாவை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்றது.

சம்பவ இடத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியம், எஸ்பி அர.அருளரசு ஆகியோர் பார்வையிட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

முதல்வர் நிவாரணம்

விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

‘கால்வாய் வெட்டியதே காரணம்’

சம்பவம் குறித்து பொத்தனூரைச் சேர்ந்த தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க தலைவர் நா.மதியழகன் கூறியதாவது:

கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை காவிரி ஆற்றின் மறுகரையில் உள்ளது. அந்த ஆலைக்குத் தேவையான தண்ணீர் காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இதற்காக ஆற்றின் மறுகரையில் காகித ஆலைக்கு சொந்தமான நீர் உந்து நிலையம் உள்ளது.  நீர் உந்து நிலையத்துக்கு தண்ணீர் எடுப்பதற்காக 3 கிணறுகள் வெட்டப்பட்டுஉள்ளன. இதில் 2 முறையாக அனுமதி பெறாதவை.

இதுதவிர, ஆற்றின் வெவ்வேறு இடங்களில் ஆலை நிர்வாகம் எவ்வித அனுமதியுமின்றி கிணறு அமைத்தும், கால்வாய் வெட்டியும் உள்ளது. இதனால், ஆற்றில் தண்ணீர் பரவிச் செல்லாமல், காகித ஆலை நிர்வாகத்தினர், தங்களின் தேவைக்காக வெட்டிய கால்வாயில் மட்டும் தண்ணீர் செல்கிறது. ஆண்டுதோறும் ஜன., 8-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை தண்ணீர் எடுக்கக்கூடாது. ஆனால், ஆலை  நிர்வாகம் இதனை மீறி தண்ணீர் எடுக்கிறது. இந்தக் கால்வாய் ஏறத்தாழ 15 அடி ஆழம் கொண்டது. இதையறியாமல் அங்கு குளித்ததால் விபத்து நேரிட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

6 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

59 mins ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்