தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் நிலைமை மோசமாகும். மேலும், கல்வி தனியார்மயமாகும் அபாயமும் உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம்.
தமிழகத்தில் 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். அதன்படி வரும் கல்வி ஆண்டு இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 22-ல் தொடங்குகிறது.
இந்நிலையில் அரசே நிதியுதவி வழங்கி தனியார் பள்ளிகளை ஊக்குவித் தால் கல்வி முழுவதும் தனியார்மயமாகி விடும் என்று ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் ஒரு மாணவன் தனியார் ஆரம்பப் பள்ளியில் 25 சதவீதம் இடஒதுக்கீடில் சேர பள்ளி, வீட்டில் இருந்து ஒரு கிமீ துாரத்தில் இருக்க வேண்டும். நடுநிலைப் பள்ளியாக இருந்தால் 3 கிமீ தொலைவுக்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. ஆனால், தமிழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அனைத்து கிராமங்களிலும் அரசுப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நமது மாநிலத்தில் ஒரு கிமீ தொலைவில் அரசுப் பள்ளி இல்லாத கிராமங்கள் மிகக் குறைவு. ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை தனியார் பள்ளிகளுக்கு ரூ.980 கோடி வரை அரசு நிதி வழங்கியுள்ளது. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான் அரசுப் பள்ளிகளை பெற்றோர்கள் வெறுக்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு வழங்கிய நிதியைக் கொண்டு அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினாலே நம்மால் சிறந்த கல்வியை வழங்க முடியும்.
அதற்கு மாறாக இந்நிலையே தொடர்ந்தால் வசதியுள்ளவர்கள் மட்டுமே கல்வி பயில முடியும் என்ற பழைய நிலை திரும்பி கல்வி முழுவதும் தனியார்மயமாகி விடும். ஏழை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே, இதில் தமிழக அரசு சிறப்பு கவனம் எடுத்து உடனே அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.
மேலும், ஆர்டிஇ அரசாணையில் கூறியபடி, குறிப்பிட்ட தொலைவிலுள்ள தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே 25 சதவீத கல்வி கட்டணத்தை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் இரா.தாஸ் கூறும்போது, ‘‘ஏற்கெனவே தனியார் பள்ளிகளின் மீதான மோகத்தால் பெற்றோர்கள் அவற்றை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் அரசுப்பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
வேதனை தரும் செயல்
விதிகளுக்கு முரணாக தொலைவு களை கணக்கில் கொள்ளாமல் அரசுப் பள்ளிக்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆர்டிஇ ஒதுக்கீடில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் குறைவதுடன், தனியார் பள்ளிகள் ஆதிக்கமும், வளர்ச்சியும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இவையெல்லாம் கல்வியை தனியார்மயமாக் குவற்கே வழிவகுக்கும். மேலும், இதில் பல்வேறு முறைகேடுகளும் நடைபெறுகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, ‘‘தமிழகத்தில் பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர்கள் பள்ளியாகவே உள்ளன. அங்கு கழிப்பறை, கட்டடம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இருப்பதில்லை.
இதனால் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான பெற்றோர் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். அங்குள்ள வசதிகளை அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்திவிட்டால் தனியார் பள்ளிகளுக்கான தேவையே இல்லை. மாறாக தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளை சேர்ப்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14-க்கும் எதிரானதாகும்.
முதலில் தனியார் பள்ளிகளில் இலவசஒதுக்கீடில் சேரும் மாணவர்களுக்கு சமமான கற்றல் வாய்ப்பு தரப்படுவதில்லை. ஏழைக் குழந்தைகள் தனியார்பள்ளிகளில் படிக்கும்போது உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
பொருளாதாரத்தில் வளர்ந்த இங்கிலாந்து போன்ற நாடுகளிலே தரமானகல்வி இலவசமாகவே வழங்கப்படுகிறது. அதேபோல், நம்நாட்டில் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக மார்தட்டும் மத்திய, மாநில அரசுகள் கல்வியை இலவசமாக அளிக்க முன்வர வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
3 hours ago