தென் தமிழகத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி தென்காசி. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக முழுக்க முழுக்க நெல்லை மாவட்டத்துக்குள்ளாக இருந்தது.
அதன்பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், விருதுநகர் மாவட்டத்தின் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் இணைத்து புதிய தென்காசி தொகுதி உருவாக்கப்பட்டது.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிலவரம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
அதிமுக | வசந்தி முருகேசன் | 424586 |
புதிய தமிழகம் | கிருஷ்ணசாமி | 262812 |
மதிமுக | சதன் திருமலைக்குமார் | 190233 |
காங்கிரஸ் | ஜெயக்குமார் | 58963 |
சிபிஐ | லிங்கம் | 23528 |
நீண்டகாலமாகவே காங்கிரஸ் வென்று வந்த இந்த தொகுதியில் 90களுக்கு பிறகே மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் அருணாச்சலம் நீண்டகாலம் இந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர். தமாகா தொடங்கப்பட்ட 1996-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து தமாகாவில் இணைந்து அருணாச்சலம் எம்.பி.யானார்.
அதன் பிறகு மூன்று தேர்தல்களில் அதிமுகவும், 2 தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றுள்ளன. திமுக கூட்டணியில் இந்த தொகுதி வழக்கமாக கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்துள்ளது.
முந்தைய தேர்தல்கள்
ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
1980 | அருணாச்சலம், காங் | ராஜகோபாலன், ஜனதா |
1984 | அருணாச்சலம், காங் | கிருஷ்ணன், சிபிஎம் |
1989 | அருணாச்சலம், காங் | கிருஷ்ணன், சிபிஎம் |
1991 | அருணாச்சலம், காங் | சதன் திருமலைக்குமார், திமுக |
1996 | அருணாச்சலம், தமாகா | செல்வராஜ், காங் |
1998 | முருகேசன், அதிமுக | அருணாச்சலம், தமாகா |
1999 | முருகேசன், அதிமுக | ஆறுமுகம், பாஜக |
2004 | அப்பாதுரை, சிபிஐ | முருகேசன், அதிமுக |
2009 | பி.லிங்கம், சிபிஐ | வெள்ளபாண்டி, காங் |
அதேசமயம் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றை அதிமுக கைப்பற்றியது.
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
தென்காசி | செல்வ மோகன்தாஸ் பாண்டியன், அதிமுக |
கடையநல்லூர் | முகமது அபுபக்கர், ஐயுஎம்எல் |
வாசுதேவநல்லூர் (தனி) | மனோகரன், அதிமுக |
சங்கரன்கோவில் (தனி) | ராஜலட்சுமி, அதிமுக |
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) | சந்திரபிரபா, அதிமுக |
ராஜபாளையம் | தங்கபாண்டியன், திமுக |
மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியை பொறுத்தவரையில் அதிமுக மற்றும் திமுக என இருகூட்டணியிலும், எப்போதுமே கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்படுவதே வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்தமுறை 1991-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக இந்த தொகுதியில் களமிறங்கியுள்ளது திமுக. அக்கட்சியின் சார்பில் தனுஷ் எம். குமார் போட்டியிடுகிறார்.
அதேசமயம் அதிமுக, தனது கூட்டணிக் கட்சியான புதிய தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. எனினும் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால் உதய சூரியனும், இரட்டை இலையும் மோதும் களமாக தென்காசி உள்ளது. இதுமட்டுமின்றி அமமுகவின் சார்பில் பொன்னுத்தாய் களமிறங்கியுள்ளார்.
தென்காசி தொகுதியில் அதிமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி உள்ளது. அதுமட்டுமின்றி புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமிக்கும் தனிப்ப்பட்ட செல்வாக்கு உண்டு. ஸ்ரீவில்லபுத்தூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் பகுதிகளில் புதிய தமிழகத்துக்கு கணிசமான வாக்கு வங்கி உண்டு. தென்காசி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் பாஜகவுக்கு சற்று வாக்குகள் உள்ளன.
அதேசமயம் கூட்டணிக்கட்சிக்கு தொகுதியை ஒதுக்காமல் திமுகவே நேரடியாக களம் இறங்கியுள்ளது அதிமுகவுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் தினகரனுக்கும் கணிசமான ஆதரவு இருக்கும் என்பதால் அவர் அதிமுகவின் கணிசமான வாக்குகளை பிரிக்கக்கூடும் என தெரிகிறது.
இதனால் அதிமுகவுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தொகுதியில் கணிசமாக உள்ள சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளும் திமுகவுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இந்த தொகுதிக்குள் உள்ளது.
இதனால் தொகுதியில் பரவலாக மதிமுகவுக்கும் ஆதரவு உள்ளது திமுகவுக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதும் நிலை தற்போது உள்ளது. அடுத்த சில நாட்களில் பிரசாரம் வேகமெடுக்கும்போது இருதரப்பிலும் பலத்தை காட்டக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
விளையாட்டு
33 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago