வீட்டில் குவிந்து கிடக்கும் 400 ஆண்டு கால ஓலைச்சுவடிகள்; மதுரை அருகே படித்துக் காட்ட ஆளின்றி தவிக்கும் ஜமீன் வாரிசு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தொல்லியல்துறை உதவி செய்யாததால் மதுரை அருகே படித்து காட்ட ஆளில்லாமல் 400 ஆண்டு கால 400க்கும் மேற்பட்ட ஓலைச்சாவடிகளை வைத்திருக்கும் ஜமீன் வாரிசு ஒருவர் தவித்துக் கொண்டிருக்கிறார்.

திரட்டி வைத்திருக்கும் தகவல்கள் ஒரு நொடியில் காணாமல் போகும் ‘டிஜிட்டல்’ யுகத்தில்தான் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த காலத்தில் நம் முன்னோர்கள் தாங்கள் பார்த்த, கேட்ட தகவல்களை பல நூறு ஆண்டுகள் பத்திரப்படுத்தி வைக்க அதை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்து சென்றனர்.

அந்த ஓலைச்சுவடிகள் வரலாற்று தகவல்களை அறிய தற்போது வரை இந்த தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், மதுரை அருகே ஒரு ஜமீன் வாரிசு ஒருவர், அவர்கள் முன்னோர் எழுதி வைத்து சென்ற 400 ஆண்டு கால பழமையான அரிய ஓலைச்சுவடிகளை வைத்து இருந்தும், அதை படித்துக் காட்ட தொல்லியல்துறையினர் முன் வராததால் அதில் உள்ள தகவல்களை அறிய முடியாமல் கடந்த 15 ஆண்டாக தவித்து வருகிறார்.

அவர், மதுரை அருகே அதலை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது குடும்பத்தினர்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன் அதலை கிராமத்தை மையமாக கொண்ட 18 கிராமங்களுக்கு ஜமீனாக இருந்துள்ளனர்.

அதலை கிராமத்தில் இவர்களுடைய பெரிய வீடு, அந்த ஊரின் அடையாளமாக உள்ளது. தற்போது பராமரிக்க பொருளாதாரம் இல்லாமல் இந்த வீடு சிதலமடைந்து காணப்படுகிறது.

பொதுமக்களிடம் பெற்ற நன் மதிப்பால் இவரது குடும்பத்தினர்தான் பஞ்சாயத்து தலைமை பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இவரது தந்தை பழனியாண்டி, கடந்த 1995ம் ஆண்டு வரை போட்டியின்றி பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார். இவரது தந்தைக்கு பிறகு, இந்த பஞ்சாயத்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் இவரது சகோதரி பஞ்சாயத்து தலைவரானார்.

இவரது தாத்தா, வீரண்ணன் சேர்வை, 1967ல் ஆண்டில் மேற்கு ஒன்றிய சேர்மனாக இருந்துள்ளார். இவரின் தந்தை சோனமுத்து பிரிட்டிஷார் ஆட்சியில் கிராம முன்சீப்பாக இருந்துள்ளார்.

இதற்கு முன்பு இவர்களுடைய தலைமுறையினர்தான், இந்த ஊர் ஜமீனாக இருந்துள்ளனர். அவர்கள் எழுதி வைத்து சென்றதுதான் இந்த 400க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள்.

இதுகுறித்து நடராஜன் கூறுகையில், ‘‘எங்கள் வீட்டில் உள்ள இரும்புபெட்டியில் 400 ஓலைச்சுவடிகள், செப்பு பட்டியம் மற்றும் அந்த காலத்தில் போர்க்களத்தில் வீரர்கள் பயன்படுத்தக்கூடிய வளரி ஆயதம் போன்றவை இருந்தன.

செப்புபட்டியத்தில் அழகர் கோயில் பாளையப்பட்டு சிறுவாழை ஜமீன், எங்கள் முன்னோரான மணியன் சேர்வைகாரர் உள்ளிட்டவர்கள் செய்த சிறந்த சேவை செய்ததிற்காக அதலை, பிள்ளையார் நத்தம், பறவை, ஊமச்சிகுளம், சமயநல்லூர், தல்லாகுளம், உள்ளிட்ட 18 கிராமங்களை எழுதி வைத்துள்ளார்.

அந்த ஊர்களில் நடக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளவும், சொத்துகளை அனுபவிக்கவும் அந்த ஜமீன் எங்கள் முன்னோருக்கு செப்புபட்டயம் எழுதி உரிமைக் கொடுத்துள்ளனர். அந்த செப்பு பட்டயம்தான் தற்போது என்னிடம் பாதுகாப்பாக உள்ளது.

ஆனால்,   ஓலைச்சுவடிகளில்தான் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. அந்த ஓலைச்சுவடிகளை எடுத்துக் கொண்டு கடந்த 15 ஆண்டிற்கு முன் மதுரை தொல்லியல் துறை அலுவலகத்திற்கு சென்றேன். அவர்கள் அதில் குறிப்பிட்ட சிலவற்றை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர்.

அந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் திருப்பித்தரவே இல்லை. ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்ட தகவல்களையும் அவர்கள் படித்துக் காட்டவில்லை.

தொல்லியல்துறை அலுவலகத்திற்கு சென்று என் காலே ஒய்ந்துவிட்டது. அதில் உள்ளவற்றை படித்து சொன்னால் என்ன இருக்கிறது என்பதையும், எங்கள் முன்னோர் எங்களுக்கும், இந்த சமூகத்திற்கும் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையும் அறிய முடியும்.

ஓலைச்சுவடிகளை பூச்சிகள் அரிக்காமல் பாதுகாப்பதே பெரிய சிரமமாக உள்ளது. ஒரு வித ரசாயணத்தை தடவி பாதுகாக்கிறேன். இதுதவிர எங்கள் முன்னோர்கள், ஏராளமான காகித ஆவணங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.

அவை நொறுங்கி உதிர்ந்து வருகின்றன. பிரிட்டிஷார் ஆட்சியில் எங்கள் முன்னோர் இருந்தபோது, கிராமங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர். கோயில் திருவிழா பதிவுகள், ஊர் பஞ்சாயத்துகள், நோய்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தொல்லியல்துறை அதிகாரிகள் எங்களுடைய இந்த ஓலைச்சுவடிகளை படித்துக் காட்ட வேண்டும்’’ என்றார்.

தொல்லியல்துறை அதிகாரி(உதவி பொறியாளர்) மாலிக்கிடம் கேட்டபோது, ‘‘முன்பு இருந்தவர்களிடம் அவர் காட்டியிருக்கலாம். அவர்கள் அதில் அக்கறை எடுத்திருக்காமல் இருக்கலாம். தற்போது மகால் தொல்லியல்துறை அலுவலகத்திற்கு வந்தால் நாங்கள் படித்துக் காட்டுகிறோம்.

அதற்காக எங்கள் துறையில் ஆட்கள் உள்ளனர். அவரிடம் இருக்கும், ஓலைச்சுவடிகள் அவரது சொத்து. அதை நாங்களே அவரிடம் பெற முடியாது. அதற்கான கட்டணம் எதுவும் இல்லை’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்