பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என ஐஜி முருகன் மீதான பாலியல் புகாரில் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக பணியாற்றிய முருகன் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் வெளியானதை அடுத்து இந்தப் புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.
புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையிலே விசாகா கமிட்டி உள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டார். இதேபோல், ஐஜி முருகனைப் பணிமாற்றம் செய்யக் கோரி புகார் அளித்த பெண் எஸ்பியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை நேற்று முன் தினம் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ''புகார் அளித்து ஆறு மாதங்களாகியும் பாலியல் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனைக்குரியது. பாதிக்கப்பட்ட பெண் குடும்பம், சமூகப் பிரச்சினைகளைத் தாண்டி புகார் அளிக்க வருவதே அரிது. அதில் இப்படித் தாமதமானால் எப்படி?
மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சம்பந்தப்பட்ட காவல் துறையை அணுகத் தடுப்பது எது?'' எனக் கேள்வி எழுப்பினார். சிபிசிஐடி போலீஸில் சென்று உங்கள் சாட்சியத்தைப் பதிவு செய்யுங்கள் என பெண் எஸ்பிக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து புகார் அளித்த பெண் எஸ்பி நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தார். இதையடுத்து இந்த வழக்குகள் இன்று மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஐஜி முருகனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி காவல் துறையினரிடம் புகார் அளிக்காமல் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரிடம் புகார் அளித்ததாலேயே, நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அரசு தலைமை வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதிபதி, இது போன்று பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் பெறும் போது, நடைமுறை குறைகளை (technical faults) கருத்தில் கொள்ளாமல், துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், ஐஜி முருகனுக்கு எதிராக பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் மீது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் உடனடி நடவடிக்கை எடுக்காததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்குகளின் தீர்ப்பை நாளை (பிப்.14) ஒத்தி வைத்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஆன்மிகம்
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago