புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை உள்ளது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையை தொடர்ந்து தக்க வைப்பதில் ஒரு போராட்ட நிலை உருவாகியிருக்கிறது. இதனால் புதுவையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தேர்தல் மூலம் 30 எம்எல்ஏக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்எல்ஏக்கள் தவிர 3 நியமன எம்எல்ஏக்களை புதுவை சட்டப்பேரவைக்கு நியமிக்க முடியும். வழக்கமாக மாநிலத்தில் ஆளும் அரசு நியமன எம்எல்ஏக்களை பரிந்துரை செய்யும். இதனடிப்படையில் மத்திய அரசு எம்எல்ஏக்களை நியமிக்கும். இதுதான் கடந்த கால நடைமுறையாக இருந்து வந்தது.
இந்நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்எல்ஏக்களை நேரடியாக நியமித்தது.
பாஜக புதுவை மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டனர். எம்எல்ஏக்கள் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் புதுச்சேரிக்கு மத்திய அரசு நியமித்த 3 எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அதோடு நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமையும் உண்டு என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை அலுவல்களில் பங்கேற்கும் நியமன உறுப்பினர்கள் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளிட்ட அனைத்திலும் வாக்களிக்கும் உரிமை உள்ளது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் வாக்குரிமை உண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அரசுக்கு பின்னடைவு என்று பேச்சு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுவை சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற 16 உறுப்பினர்கள் இருந்தால் போதும். தேர்தலில் போட்டியிடும் கட்சி 16 எம்எல்ஏக்களை பெற்றால் ஆட்சி அமைக்கும். ஆனால் எதிர்க்கட்சி 14 எம்எல்ஏக்கள் பலத்தை பெற்று, மத்தியில் ஆளும் அரசும் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தால் 3 நியமன எம்எல்ஏக்களும் அவர்கள் பக்கம் சேரும் நிலை வரும். இதன்மூலம் அவர்கள் சட்டப்பேரவையில் அவர்களின் பலம் 17 ஆக உயரும்.
இதனால் சட்டப்பேரவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து வாக்களித்து ஆட்சியை கவிழ்த்து விட முடியும். இதனால் மக்களால் தேர்வு செய்யப்பட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் அந்த கட்சி ஆட்சியை தொடர்வதில் சட்டச் சிக்கல் ஏற்படும். தற்போது இந்நிலை புதுச்சேரி அரசுக்கு ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.
தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் 15, என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4, திமுக 2, சுயேட்சை 1, நியமன எம்எல்ஏக்கள் 3, காலியிடம் 1 என்று உள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியானது 15 எம்எல்ஏக்களுடன் கூட்டணி கட்சியான திமுக 2, சுயேட்சை ஒருவர் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. 30 எம்எல்ஏக்கள் என கணக்கிட்டால் 16 எம்எல்ஏக்கள் இருந்தால் போதும். தற்போது நியமன எம்எல்ஏக்கள் மூவரையும் சேர்ந்தால் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 33 ஆகிறது.
இதில் பெரும்பான்மையை நிருபிக்க 17 எம்எல்ஏக்கள் தேவை. இதன்படி தனிப்பட்ட பெரும்பான்மையுடன் காங்கிரஸ் இல்லை. கூட்டணி ஆதரவு இருந்தால் மட்டுமே பெரும்பான்மை கிடைக்கும். இதில் ஆதரவு தருவோர் ஆதரவை திரும்ப பெற்றால் நிலை சிக்கலாகும்.
நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை என்பதால் பெரும்பான்மையை தொடர்ந்து தக்க வைப்பதிலும் இனி சிக்கல் ஏற்படும் சூழல் புதுச்சேரியில் உருவாகியுள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஆன்மிகம்
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago