சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் சம்பந்தப்பட்ட 22 காவலர்களும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது, இந்திய அரசியல் வரலாற்றில் படிந்த கருப்பு அத்தியாயம் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "குஜராத்தில் மோடி முதல்வராகவும், அமித் ஷா அமைச்சராகவும் இருந்தபோது சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்கொடுமை பற்றிய ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. பல விரிவான தகவல்கள் அவற்றில், அங்கு நடைபெற்ற இனப்படுகொலை பற்றிய, கோத்ரா எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு என்ற திட்டமிட்ட பழி போட்ட நடவடிக்கைகள் எல்லாம் நமது நாட்டு அரசியல் வரலாற்றில் கறை படிந்த கருப்பு அத்தியாயங்கள் ஆகும். அதில் ஒரு நிகழ்வுதான் சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கும் ஆகும்.
இதில் குற்றம் சுமத்தப்பட்ட அமித் ஷாவும், காவல்துறை உயர் அதிகாரி டி.ஜி.வன்சாராவும் 2014-ல் விடுவிக்கப்பட்டனர். அவ்வழக்கில் அமித் ஷா குற்றமற்றவர் என்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிணை வழங்கியவருக்கு உரிய அரசியல் பரிசும் - அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் தரப்பட்டது. இப்போது சிபிஐ இவ்வழக்கை நடத்திய நிலையில், 22 காவலர்களும் குற்றமற்றவர்கள் என்று முடிவுக்கு வந்து நீதிபதி சர்மா தீர்ப்பளித்திருக்கிறார்.
'உயிரிழந்த மூன்று பேர்களின் குடும்பங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்; எனினும் சட்ட ஆதாரங்கள் நடைமுறைகளின்படிதான் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன’’ என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
92 பேர் பிறழ் சாட்சிகளாக...
இந்த சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் 210 பேர் சாட்சிகள்; இவர்களில் 92 பேர் பிறழ் சாட்சிகளாக மாறியதன் விளைவே இத்தகைய அதிர்ச்சி தரும் தீர்ப்பும், அதனையொட்டிய 22 பேரும் குற்றமற்றவர்கள் என்ற அறிவிப்பும் ஆகும்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கூலிப்படைகளால் கொல்லப்பட்ட சங்கரராமன் படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, கைதாகி, ஜெயிலுக்கும் பிறகு பெயிலுக்கும் அலைந்து வழக்கு நடந்த மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, அவரது இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி - தற்போது அவரே 'முற்றிய' முதல் சங்கராச்சாரி - இருவரும் அவ்வழக்கிலிருந்து புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் 87 பிறழ் சாட்சிகளின் 'பல்டி'யின் காரணமாக கொலைக் குற்றத்திலிருந்து விடுதலையாயினர்.
அதேபோன்ற நிலைதான் இந்த சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கிலும் நடைபெற்றிருக்கிறது.
டி.ஜி.வன்சாராவின் ட்விட்டர் பதிவு!
இதற்குமுன் டி.ஜி.வன்சாரா என்ற குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட குஜராத் காவல்துறை அதிகாரி ட்விட்டரில், 'மோடியைக் காப்பாற்ற இதுபோன்ற 'என்கவுன்ட்டர்கள்' முன்கூட்டியே நடத்தப்படுவது தேவைப்பட்டது' என்றும் குறிப்பிட்டிருக்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார் குற்றவாளியாக இருந்த சங்கரராமன் கொலை வழக்கில், கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவி, மகனும் பிறழ் சாட்சியங்களாக மாறினர் அல்லது மாற்றப்பட்டனர் என்பது மறக்கப்படாத உண்மைகள் ஆகும்.
அதுபோலவே, இந்த குஜராத் சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கிலும், மனைவி கவுசர், துளசிராம் பிரஜாபதி என்பவரும், பேருந்து ஓட்டுநரும், ஒரு பயணியும் ஆகிய நால்வரும் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று நீதிமன்றத்தில் அடித்த பல்டியில் கூறியுள்ளனர். 'சத்தியமேவ ஜெயதே'
காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கு மேல்முறையீட்டினை தமிழக அரசோ - புதுவை அரசோ செய்யவே இல்லை. அதற்கு அன்றைய குடியரசுத் தலைவர் வரை காஞ்சி மடத்திற்குச் செல்வாக்கு இருந்ததுதான் காரணம் என்று பரவலாகப் பேசப்பட்டது.
இதன் கதியும் அப்படித்தானோ தெரியவில்லை. இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அப்பாவி சீக்கியர்களைக் கொன்ற - கலவரம் விளைவித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன்குமார் குற்றவாளியாகி, தண்டனை தரப்பட்டதை பாஜகவினர் கொண்டாடி, அதனை காங்கிரஸுக்கு எதிரான பிரச்சார ஆயுதமாக்கி மகிழ்கின்றனர்.
நீதிக்கு முன்னால் நிறுத்தப்படுவது காலத்தின் கட்டாயம்
உண்மைக் குற்றவாளிகள் எந்தக் கட்சியினராயினும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்பது நமது உறுதியான கருத்து.
ஆனால், இன்று பாஜகவினர் காங்கிரஸ் கட்சியினரின் தண்டனைக்கு மகிழ்வதைப்போல, குஜராத் பழைய இனப்படுகொலை - எரிப்பு நிகழ்வுகள்கூட வருங்காலத்தில் நீதிக்கு முன்னால் நிறுத்தப்படுவது காலத்தின் கட்டாயம் அல்லவா?
இறுதிச் சிரிப்பே எப்போதும் வெற்றிச் சிரிப்பாகும். எவராயினும் தவறு செய்தவர்கள் தப்பித்தால் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடையும் - ஜனநாயகம் வெற்றி பெறாது" என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
27 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago