மகாமகத்தையொட்டி கும்பகோணம் நகராட்சியை மேம்படுத்த ரூ.43.78 கோடி ஒதுக்கீடு: முதல்வர்

By செய்திப்பிரிவு

கும்பகோணம் நகரில் நடைபெறவுள்ள மகாமகம் பெருவிழாவையொட்டி நகரை மேம்படுத்த 43.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய பணிகள் மேற்கொள்ளப்படும். என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: "இந்நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில், 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்ப் பணிகளும், 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்கு அமைக்கும் பணிகள் மற்றும் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், 10 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள், 1 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேரோடும் வீதி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார சந்துகளை மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதுமட்டுமல்லாமல், 11 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவறைகளை மேம்படுத்தும் பணிகள், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலக்காவேரி ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் 43.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

கொடைக்கானல் ஏரியை அழகுபடுத்த நிதி:

சுற்றுலா நகரமான கொடைக்கானலிலுள்ள ஏரியை அழகுபடுத்த ரூ.87 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கொடைக்கானல் நகராட்சியில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டு, பொதுமக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதென அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில், 87 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொடைக்கானல் ஏரி அழகுபடுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் ஏரியினை தூர்வாருதல், ஆகாயத் தாமரை மற்றும் தேவையற்ற நீர் தாவரங்களை அப்புறப்படுத்துதல், நீரில் உள்ள ஆக்ஸிஜன் தன்மையினை அதிகரித்தல், மீன் வளர்ப்பிற்கு தேவையான தகுந்த சூழ்நிலையினை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ஏரியினை சுற்றிலும் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் வெளியேற்றுதல், கழிவு நீர் மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பூங்கா அமைத்தல், வாகன நிறுத்தம் அமைத்தல், சாலை வசதியினை மேம்படுத்துதல், அலங்கார தாவரங்களை அமைத்தல், வண்டல் படிவுகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். இவை மட்டுமின்றி, படகு குழாம்களை முறைப்படுத்தி அழகுப்படுத்துதல், ஏரியின் எழில் தோற்றத்தினை மேம்படுத்துதல், சுற்றுலா தகவல் மையம், சைக்கிள் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.

கரூரில் சாலை மேம்பாடு:

கரூர் நகரின் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, கரூர் நகராட்சியில், குளத்துப்பாளையம் - ஈரோடு - கரூர் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 3 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.

கரூர் நகராட்சியில் வடக்கு பசுபதி பாளையத்தில், திருச்சி மற்றும் கரூர் திண்டுக்கல் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 2 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.

மேற்காணும் நடவடிக்கைகள், கொடைக்கானல், கும்பகோணம் மற்றும் கரூர் நகராட்சிகளைச் சார்ந்த மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திடவும், ஆரோக்கியமான சுற்றுசூழல் நிலவவும் வழிவகுக்கும்" இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

49 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்