கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான திருவாரூர் கிராமப் பகுதிகளை ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் நேரில் ஆய்வு செய்தார்.
வங்கக் கடலில் உருவாகி வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த ‘கஜா’ புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் புயலால் 63 பேர் மரணமடைந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஓட்டு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏராளமான தன்னார்வலர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இன்னும் பல கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சம்பவ இடங்களுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். நேற்று (புதன்கிழமை) நாகை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று (வியாழக்கிழமை) திருவாரூர் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர், மன்னார்குடி அருகே கோட்டூர் பகுதியில் இடிந்த வீடுகள், கூரைகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் அவரிடம், ''மின்சாரம், குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; உடனடியாக வீடுகள் கட்டித்தர வேண்டும்'' என்று வலியுறுத்தினர்.
ஆளுநருடன் அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். கோட்டூரைத் தொடர்ந்து திருத்துறைப் பூண்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும் பணியை ஆய்வு செய்தார்.
முன்னதாக, தட்டான்கோவில் பகுதியில் தமிழரசி என்பவரின் இடிந்த வீட்டை ஆளுநர் ஆய்வு செய்தார். அப்போது ''உங்களுக்கு ரூ.18,500 இழப்பீடு வழங்கப்படும்'' என்றார். ஆங்கிலத்தில் அவர் கூறியதை, ஆட்சியர் நிர்மல் ராஜ் தமிழில் மொழிபெயர்த்து பொது மக்களிடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து தென்னை விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முத்துப்பேட்டை கிராமப் பகுதிகளில் ஆய்வு செய்வார் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஓடிடி களம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
தமிழகம்
6 hours ago