சேலம் - சென்னை ரயிலில் ரிசர்வ் வங்கிப்பணம் ரூ.5.75 கோடி கொள்ளை வழக்கு: மோஹர்சிங் உள்ளிட்ட 5 கொள்ளையர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்

By செய்திப்பிரிவு

சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட ரிசர்வ் வங்கிப் பணம் ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்தியப் பிரதேசத்தில் பிடிபட்ட தலைவன் மோஹர் சிங் உட்பட 5 கொள்ளையர்களை சிபிசிஐடி போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட ரூ.323 கோடி பழைய, கிழிந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவரப்பட்டது.

சேலத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த ரயிலில் பணப்பெட்டி கொண்டு வரப்பட்டது. பெட்டியைத் திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிந்தது. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி துப்பு துலங்காத நிலையில் சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

சிபிசிஐடியின் தடயவியல் போலீஸார் பெட்டியை அங்குலம் அங்குலமாகச் சோதித்தனர். பெட்டியின் மேற்கூரை சதுரமாகக் கத்தரிக்கப்பட்டு ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவுக்கு வெட்டப்பட்டு அதன் வழியாக ஆட்கள் நுழைந்து பணப்பெட்டிகளில் சிலவற்றைக் கொள்ளையடித்தது தெரியவந்தது.

மொத்தம் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் அடங்கிய பழைய நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. சிபிசிஐடி போலீஸார் சேலத்திலிருந்து சென்னை வரும் 350 கிலோ மீட்டர் தூரத்தை ஆய்வு செய்தனர். ரயில் வரும் வழியெங்கும் உள்ள இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்ந்தனர். ஆனாலும் துப்பு கிடைக்கவில்லை. மின்சார ரயிலாக இருந்தாலும் சேலத்திலிருந்து விழுப்புரம் வரும் வரையில் அது டீசல் என்ஜின் மூலம் இழுத்து வரப்பட்டது ஆய்வில் தெரிய வநதது.

மின்சார ரயில் கேபிள் வரும் இடத்தில் ரயில் பெட்டியின் மேற்கூரையைப் பெயர்த்து கொள்ளை அடிக்க முடியாது. ஆகவே டீசல் என்ஜின் வரும் வரையில் உள்ள பகுதிகளிலேயே மேற்கூரையில் துளையிட்டு கொள்ளை அடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகித்தனர்.

வழக்கில் தேக்க நிலை ஏற்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீஸார் இஸ்ரோ உதவியை நாடினர். குறிப்பிட்ட நாள் நேரம் குறித்து தகவல் கொடுத்து அதற்கான படங்களைக் கேட்டனர். இஸ்ரோ உதவியுடன் செயற்கைக்கோள் படம் கிடைத்தவுடன் போலீஸாருக்கு குறிப்பிட்ட இடத்தில் கொள்ளை அடிக்கப்பட்டது என்ற துப்பு கிடைத்தது. இஸ்ரோ தகவல்களை வைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியத்தில் கொள்ளையர்கள் மத்தியப் பிரதேசம், பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.

மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தை சேர்ந்த மோஹர்சிங் என்ற கொள்ளைக்கூட்டத் தலைவனின் ஆட்கள் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாரின் தீவிர விசாரணையில் மோஹர்சிங்கின் கூட்டாளிகள் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் (38), ரோஹன் பார்த்தி (29) இருவரும் கடந்த அக்டோபர் 12 அன்று சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோஹர்சிங் தலைமையில் இக்குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டனர். மொத்தம் 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.

குற்றம் நடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு ரயில் சின்னசேலத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கிச் செல்லும்போது மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்த இவர்கள் மேற்கூரையை வெட்டி எடுத்து இரண்டு பேர் மட்டும் உள்ளே இறங்கி பணக்கட்டுகளை எடுத்துக்க்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

மோஹர் சிங் தலைமையிலான இந்த குழு பார்த்தி என்று அழைக்கப்படும் பயங்கரமான கொள்ளைக் கும்பலாகும். இவர்கள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களில் பரவி இருப்பவர்கள் ஆவர்.

மோஹர்சிங் உட்பட 5 பேரையும் மத்தியப் பிரதேசம் சென்ற தனிப்படை கைது செய்தது. அங்கு டிரான்சிட் வாரண்ட் போட்டு அவர்களை நேற்று மாலை சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் இன்று காலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

வாழ்வியல்

13 mins ago

ஓடிடி களம்

23 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

58 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்