ரஃபேல் ஊழலிலிருந்து தப்பிக்க சிபிஐ அமைப்பை ‘கூண்டுக்கிளி’ ஆக்குவதா?- ஸ்டாலின் கண்டனம்

By செய்திப்பிரிவு

பிரதமரின் ‘ரஃபேல் ஊழல்’, எடப்பாடி பழனிசாமி மீதான ‘டெண்டர் முறைகேடு’, ‘குட்கா புகழ்’ அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு என விசாரணை நடத்த வேண்டிய நிலையில், சிபிஐ இயக்குநரை மாற்றி ஜூனியர் அதிகாரியை பிரதமர் நியமித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“நேர்மையாகவும், சுதந்திரமாகவும், சட்ட நெறிமுறைகளின் படியும் செயல்பட வேண்டிய நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவை, பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் மாற்றியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு புகார்களுக்கு உள்ளான ராகேஷ் அஸ்தனாவை சிபிஐ அமைப்பிற்குள் பிரதமர் நரேந்திர மோடி வலுக்கட்டாயமாக திணிப்பதை எதிர்த்து தொடக்கத்திலிருந்தே சிபிஐ இயக்குநர் போர்க்கொடி உயர்த்தி வந்ததை நாடே அறியும். ஆனால், அப்போது எல்லாம் பிரதமர் அலுவலகம் அமைதி காத்தது. பிரதமரும் அமைதி காத்தார்.

சிறப்பு இயக்குநர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான டி.எஸ்.பி.யை நீதிமன்றம் “ஏழு நாள் சிபிஐ கஸ்டடிக்கு” அனுப்பி, அந்த கஸ்டடி விசாரணை தொடங்கும் நேரத்தில் சிபிஐ இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டிருப்பதில் நிறைய மர்மங்கள் இருக்கிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற்றுள்ள காலேஜியத்தால் தேர்வு செய்யப்பட்ட இயக்குநருக்கு பணிக்கால பாதுகாப்பு இருக்கும் நிலையில், அவரை மாற்றியிருப்பது எதேச்சதிகாரச் செயல் மட்டுமின்றி பாஜக அரசின் நிர்வாக அராஜகமாகவே பார்க்க முடிகிறது.

சில வாரங்களுக்கு முன்புதான் நாட்டை உலுக்கிய ரஃபேல் ஊழல் புகாரினை நேரடியாக பெற்றுக் கொண்டார் சிபிஐ இயக்குநர். இந்தப் புகாரின் மீது முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.

அந்தக் கோபத்தில் இருந்த பிரதமர் இப்போது ஏற்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள நாகேஸ்வரராவை சிபிஐ அமைப்பின் தற்காலிக இயக்குநராக நியமித்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.

இது ராகேஷ் அஸ்தனாவைக் காப்பாற்ற என்பதை விட ரஃபேல் ஊழல் புகாரை மறைக்கவே என்ற பலத்த சந்தேகத்தை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில் உள்ள மூத்த டி.ஜி.பி.க்களில் ஒருவர்தான் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட வேண்டும் என்ற மரபு இருக்கிறது. சிபிஐ அமைப்பில் தற்போது வேறு கூடுதல் இயக்குநர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், அவர்களை எல்லாம் தவிர்த்து விட்டு இணை இயக்குநர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவரை இயக்குநராக நியமித்து, ரஃபேல் போர் விமான ஊழலை மூடி மறைக்க முயற்சிக்கும் பிரதமரின் நடவடிக்கை பேரதிர்ச்சியளிக்கிறது.

தனக்கும், தனது அரசுக்கும் எதிரான புகாரைப் பெற்றுக் கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சிபிஐ அமைப்பையே தகர்த்தெறியும் விதத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடந்து கொண்டிருப்பது போன்றதொரு தோற்றத்தை இதன் மூலம் பிரதமர் உருவாக்கியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர் ராவ் ஏற்கெனவே சென்னையில் இணை இயக்குநராக இருந்தபோதே பெரும் சர்ச்சைக்குள்ளானவர். முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்திலேயே சென்று சந்தித்தவர்.

தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிஐ டைரக்டராக இருந்த அலோக் வர்மா, நாகேஸ்வர் ராவ் மீதே வழக்குத் தொடர விரும்பினார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. மிகவும் சென்சிட்டிவான வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ அமைப்பிற்கு அப்பழுக்கற்ற, நேர்மையான தலைமைக்குணம் படைத்த ஒரு இயக்குநர் இருக்க வேண்டிய இந்த நேரத்தில் இப்படியொரு மிகவும் ஜூனியர் அதிகாரியை நியமித்து, சிபிஐ அமைப்பை தங்களின் “கூண்டுக்கிளி”யாக்கியுள்ளது பாஜக அரசு.

தேர்தல் நேரத்தில் சிபிஐ அமைப்பை எதிர்க்கட்சிகள் மீது பயன்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பிற்கு போர் விமானங்களை வாங்குவதில் சுமத்தப்பட்டுள்ள ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவும் இது மாதிரியான தந்திரங்களில் ஈடுபட்டு, அதிரடி மாற்றங்கள் மூலம் சிபிஐ அமைப்பின் சுதந்திரம், நம்பகத்தன்மை, தன்னாட்சி அதிகாரம் எல்லாவற்றின் மீதும் போர் தொடுத்திருப்பதை துளி கூட ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மாற்றிய உத்தரவை உடனடியாக பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்ய வேண்டும்''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்