ஊரகப் பகுதி மக்களுக்கு புதிய நலத் திட்டங்கள்: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இன்று உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா, ஊரகப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஊரகப் பகுதிகளில் குடிநீர் பணிகள்:

கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக விளங்கும் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யும் வகையில் நடப்பாண்டில், 40 கோடி ரூபாய் செலவில் 1,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல், 45 கோடி ரூபாய் செலவில் 3,000 சிறு மின் விசைப் பம்புகள் அமைத்தல், 6 கோடி ரூபாய் செலவில் 1,000 கைப் பம்புகள் அமைத்தல், 10 கோடி ரூபாய் செலவில் பழுதாகியுள்ள 10,000 ஆழ்துளைக் கிணறுகளை புனரமைத்தல் என மொத்தம் 101 கோடி ரூபாய் செலவில் ஊரகப் பகுதிகளில் குடிநீர் பணிகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும்.

குப்பைகளை எடுத்துச் செல்ல 3 சக்கர மிதிவண்டி:

சுகாதாரமான கிராமங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், கிராமங்களை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில், 44 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 12,524 கிராம ஊராட்சிகளுக்கும், குப்பைகளை எடுத்துச் செல்வதற்காக 17,638 மூன்று சக்கர மிதி வண்டிகள் வழங்கப்படும். இதன்படி, மக்கள் தொகை 3,000-க்கு குறைவாக உள்ள கிராம ஊராட்சிகளுக்கு தலா ஒரு வண்டியும், மக்கள் தொகை 3,001 முதல் 10,000 வரை உள்ள கிராம ஊராட்சிகளுக்கு தலா இரண்டு வண்டிகளும்; மக்கள் தொகை 10,000-த்திற்கு மேல் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு தலா மூன்று வண்டிகளும் வழங்கப்படும்.

புதிய ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள்:

கிராம ஊராட்சிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், பழுதடைந்த 500 கிராம ஊராட்சி அலுவலகக் கட்டடங்களுக்கு பதிலாக பொதுமக்கள் வந்து செல்லவும், மன்றக் கூட்டங்கள் நடத்தவும், தளவாடப் பொருட்கள் வைக்கவும் ஏற்றவாறு போதிய இட வசதியுடன் கூடிய புதிய ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஊராட்சி ஒன்றியச் சாலைகள் மேம்பாடு செய்யப்படும்:

ஊரகப் பகுதிகளின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சாலைகள் நேரடி பங்கு வகிப்பதால், கிராமப் பகுதிகளிலுள்ள பழுதடைந்த 1,000 கிலோ மீட்டர் நீளமுள்ள பேருந்து செல்லும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வலுப்படுத்தப்பட்டு, மேம்பாடு செய்யப்படும். மேலும், இச்சாலைகளை நீண்டகாலம் பயன்படுத்திடும் வகையில், தேவையான வடிகால் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும்.

3,000 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டப்படும்

இம்முயற்சிக்கு மேலும் வலுவூட்டும் வகையிலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள், கருவுற்றிருக்கும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் ஆகியோருக்கு சுகாதாரமான சூழ்நிலையினை அளிக்கும் வகையிலும் 3,000 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் 195 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளிலுள்ள 40,680 ஊரகச் சொத்துக்கள் 200 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.

கிராமப்பகுதிகளில் பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் அமைக்கப்படும்

கிராமப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்ச் சாலைகளை அமைக்க உத்தரவிடப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் 5,710 கிலோ மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் 717 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில், இந்த ஆண்டு 175 கோடி ரூபாய் மதிப்பில் 1,600 கிலோ மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் அமைக்கப்படும்.

கிராம ஊராட்சி சேவை மையங்கள் கட்டப்படும்

அரசு சேவைகளான பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல், வரிகளை செலுத்துவதற்கான வசதிகள் மற்றும் பல்வேறு வகையான சமூக பாதுகாப்பு உதவிகள் பெறுவதற்கான வசதிகள், ஊரக வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றை வழங்கும் சேவை மையங்களாக கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் திகழ வேண்டும் என்பதே எனது தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடையும் வகையில், 4,460 கிராம ஊராட்சி சேவை மையங்கள் 648 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இதே போன்று, 150 வட்டார ஊராட்சி சேவை மையங்கள் 45 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

சுய உதவிக் குழுக்களுக்கு 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன்

சுய உதவிக் குழு வங்கிக் கடன் இணைப்பானது, மகளிரை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஆற்றல் படுத்தும் ஒரு முக்கிய உயிர்நாடியாகும். கடந்த மூன்று ஆண்டுகளில், 2 லட்சத்து 37 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் 14,097 கோடி ரூபாய் கடன் உதவி பெற்று பயனடைந்துள்ளன. 2014-15 ஆம் ஆண்டில், சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்படும். இதன் மூலம் 2.5 லட்சம் சுய உதவிக் குழுக்கள் பயனடையும்.

கடன் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதுடன் வங்கிக் கடன் திரும்ப செலுத்தும் பணிகளை நிர்வகிக்க சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளரின் சேவை அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பகுதிக்கும் தலா நான்கு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, 2014-2015 ஆம் ஆண்டில் 2000 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுய உதவிக் குழு உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்யப்படும் இந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதாந்திர மதிப்பு ஊதியமாக 2,000 ரூபாய் வழங்கப்படும். இவர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு கல்வி கடன் வசதி, வங்கிக் கடனை திரும்பச் செலுத்துதல் மற்றும் காப்பீடு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு நிதி ஒதுக்கீடு

வறுமையை குறைக்கும் முயற்சியாக, சமுதாய முதலீட்டு நிதி 10 லட்சம் ரூபாய் ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கும் வழங்கப்படுகிறது. 2013-2014 ஆம் ஆண்டில், முதல் கட்டமாக அமைக்கப்பட்ட 2,323 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக 232 கோடி ரூபாய் அரசால் அனுமதிக்கப்பட்டது. 2014-2015 ஆம் ஆண்டில், இரண்டாம் கட்டமாக எடுக்கப்பட்டுள்ள 3,491 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் 349 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த நிதி ஆதாரங்கள் மூலம் 5.9 லட்சம் குடும்பங்கள் நேரடியாக பயன்பெறும்.

ஊரகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், ஊரகப் பகுதிகளில் சிறிய அளவில் விவசாய நிலங்களை வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட / பழங்குடியின, சிறு மற்றும் குறு விவசாயிகளின் கூடுதல் வருவாய்க்கு வழி ஏற்படுத்தித் தரும் வகையிலும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 4,000 ஏக்கர் நிலப்பரப்பில் மரக் கன்றுகள் மற்றும் பழக் கன்றுகள் வளர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் 62 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் 37.54 லட்சம் மனித சக்தி நாட்கள் உருவாக்கப்படும்.

வட்டார உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்

விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை பாதுகாக்க போதிய சேமிப்பு வசதிகள் ஏற்படுத்தும் வகையில், 2014-2015 ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள 385 வட்டாரங்களில், ஒரு வட்டாரத்திற்கு ஒரு உணவு தானிய சேமிப்பு கிடங்கு என்ற விகிதத்தில், 385 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் தலா 8 லட்சம் ரூபாய் வீதத்தில் 30 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், கிராமங்கள் மேம்படவும், கிராம மக்கள் வளம் பெறவும், அதன் மூலம் தமிழ்நாடு பல வகையில் முன்னேற்றம் அடையவும் வழி வகுக்கும் என முதல்வர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

29 mins ago

ஜோதிடம்

32 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்