பூந்தமல்லி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸார் துரத்திச் சென்று பிடித்தனர்.
சென்னையில் உள்ள முக்கியச் சாலைகளில் ஆட்டோ பந்தயங்கள் அடிக்கடி நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இதுபோல் பந்தயங்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் நேற்று வண்டலூர் - மீஞ்சூர் செல்லும் சாலையில் சோதனை நடத்தினர். அப்போது நெமிலிச்சேரியில் இருந்து குன்றத்தூர் நோக்கி இந்தச் சாலையில் ஆட்டோக்கள் வேகமாகவும், அதற்கு முன்னால் மற்றும் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள்களும் அணிவகுத்து வந்தன.
இதனைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை விரட்டிச் சென்றனர். போலீஸாரைக் கண்டதும் அவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். சுமார் 10 கிமீ தூரம் அவர்களை விரட்டிச் சென்ற போலீஸார், ஆட்டோக்களை ஓட்டிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோக்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸார் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் பிடிபட்டவர்கள் திருவெற்றியூரைச் சேர்ந்த சுரேஷ் (36), மாங்காடு மணிகண்டன் (30), சதீஷ் (35), பாடி சங்கர் (33), பாஸ்கர் (29) என்பது தெரிந்தது. இவர்கள் நெமிலிச்சேரியில் இருந்து திருமுடிவாக்கம் வரை ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்டதும், பந்தயத்துக்கு தகுந்தாற்போல் ஆட்டோக்கள் வடிவமைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. சில நேரங்களில் ஆட்டோவை ஒரு பக்கம் சாய்த்து இரண்டு சக்கரங்களில் ஓட்டியது, அதனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வருபவர்கள் வீடியோ எடுப்பது போன்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் இவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய சிந்தாதிரிப்பேட்டை தங்கராஜ், புதுப்பேட்டை ரமேஷ் மற்றும் இவர்களின் கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர். பூந்தமல்லி அருகே ஆட்டோ பந்தயம் நடைபெற்ற சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
31 secs ago
இந்தியா
13 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
22 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
33 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
40 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago