சென்னை: பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்பாக அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது, முட்டிப்போட வைப்பது, கிள்ளுவது போன்ற கடுமையான தண்டனைகள் வழங்குவதை தடை செய்யும் வகையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யக்கோரி உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த காமாட்சி சங்கர் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும், பள்ளிகளில் தண்டனை வழங்குவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவு: குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவது என்பது அவர்களை எந்த விதத்திலும் நல்வழிப்படுத்தாது. மாறாக குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இடம் கொடுக்காமல், அவர்களும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளை கண்காணிக்க வேண்டுமேயன்றி அவர்களிடம் அடக்குமுறையை கையாளக் கூடாது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்துவது என்பது முக்கியமானது. எனவே, இதுதொடர்பான விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் இந்த விதிகளை கண்டிப்பாக தமிழகம் முழுவதும் அமல்படுத்த தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், விதிகளை மீறி குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவையும் அமைக்க வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
22 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago