மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருஷ்டி பரிகாரத்தால் தீ விபத்தா?: கேமரா பதிவுகளை ஆய்வு செய்கிறது தனிப்படை

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிகழ்ந்த தீ விபத்துக்கு, கடைக்காரர்கள் திருஷ்டி பரிகாரத்துக்காக கொளுத்திய சூடத்தில் இருந்து எழுந்த தீதான் காரணமா என்பதை அறிய கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மதுரை மீனாட்சி கோயிலில் கடந்த பிப்.2-ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 கடைகள் எரிந்து சேதமடைந்தன. இதில் கிழக்கு ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள வீரவசந்தராயர் மண்டபம் பலத்த சேதமடைந்தது. 7 ஆயிரம் சதுர அடி அளவுக்கு மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இப்பகுதியில் உள்ள தூண்கள், தொட்டி நந்தி சிலையின் வடக்கு, தெற்கு பகுதியில் உள்ள தூண், விதாரப் பகுதிகளில் கடுமையாக கரி படர்ந்துள்ளது.

இப்பகுதிகளில் முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே பாதிப்பின் முழு விவரம் தெரியவரும். இங்கு, மேலும் 10,000 சதுர அடி அளவுக்கும், 20 தூண்கள் வரையிலும் பாதிப்பு இருக்கலாம் என இதுவரை பார்வையிட்ட அதிகாரிகள் கருதுகின்றனர். இப்பகுதி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்பதால் ஆய்வுப்பணியை பாதுகாப்புடன் மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் இழப்பு

36 கடைகள், இங்குள்ள பொருட்கள், விற்பனை பணம், கோயில் கட்டிட பாதிப்பு என இழப்பின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பழமை மாறாமல் சீரமைக்க நீண்ட காலம் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து மாநகர் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நுண்ணறிவுப் பிரிவு, சிஐடி, கியூ, ஐபி, தேசிய புலனாய்வு என பல்வேறு பிரிவு போலீஸாரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோயிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கேமராக்களின் ‘ஹாட் டிஸ்க்’ பதிவுகள் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் சேகரிக்கப்பட்டன. இதனை விபத்து நடந்த அன்று நள்ளிரவிலேயே போலீஸார் கைப்பற்றினர். மேலும் கீழ சித்திரை வீதியில் உள்ள வீடியோ பதிவுகள் அடங்கிய ஹாட் டிஸ்கையும் போலீஸார் கைப்பற்றி உள்ளனர். உயர் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக வீடியோ பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்துவருகின்றனர். இதில், ஆயிரங்கால் மண்டபம் டிக்கெட் விற்பனையகத்தில் இருந்து 2-வது கடையில் தீ முதலில் பற்றியது தெரிந்தது. இங்கிருந்த தீ அடுத்தடுத்து வேகமாக மற்ற கடைகளுக்கு பரவி பெரும் விபத்தாக மாறியுள்ளது.

காற்றில் பறந்த தீப்பொறி

வெள்ளிக்கிழமைகளில் கடைகளை அடைத்ததும் திருஷ்டி பரிகாரத்துக்காக சூடம் கொளுத்தும் பழக்கம் இருந்துள்ளது. விபத்து நடந்த இரவு வெள்ளிக்கிழமை என்பதால், திருஷ்டிக்காக கொளுத்தப்பட்ட சூடம் அணையும் முன்பே, கடைக்காரர்கள் வெளியேற, காற்றில் தீ பறந்து விபத்தானதாகவும் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து குறிப்பிட்ட கடை உரிமையாளரிடம் நேற்று காலை முதல் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓரிரு நாளில் விபத்தின் பின்னணி குறித்து முழுமையாகத் தெரியவரும் என தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எந்த தகவலும் கசிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.

மாற்று மதத்தினர் இல்லை

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு பிரிவினர் கூறும்போது, ‘அம்மன் சன்னதி நுழைவு வாயிலில் 50 ஆண்டுகளாக சந்தனம் விற்பவர் ஒருவரும், விபத்து நடந்த கடைப்பகுதியில் கூலி வேலைக்காக முதியவர் ஒருவரும் உள்ளனர். இவர்கள் 2 பேர் மட்டுமே மாற்று மதத்தினர். தீ விபத்தில் சதி ஏதும் இல்லை என விசாரணையில் தெரிந்துள்ளது’ என்றனர்.

கோயிலில் 139 கடைகள், புது மண்டபத்தில் 300 கடைகள் உள்ளன. விபத்துக்குப் பிறகு எல்லா கடைகளையும் மாற்று இடங்களுக்கு கொண்டு செல்வது குறித்து விசாரணைக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தொழிலுக்கு பாதிப்பில்லாத வகையில் உரிய மாற்று இடம் கிடைத்தால் செல்ல தயாராக இருப்பதாக கடை உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

விளையாட்டு

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்