மதுரை: தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் அஞ்சல் வாக்குமறுக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க, அஞ்சல் வாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் முக்கியத்துவம் கொடுக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே இருந்த அஞ்சல் வாக்குவசதி, ரயில்வே மற்றும் அத்தியாவசியப் பணியில் இருப்போருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ரயில்வே தொழிலாளர்கள், அத்தியாவசியப் பணியில் இருப்போரும் அஞ்சல் வாக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்கி, 2021 ஜனவரியில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 19-ல் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகம், கேரளாவில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்குரிமை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
இதனால் தேர்தல் நாளன்று பணியில் உள்ள ரயில் ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள், ரயில்வே மேலாளர்கள் மற்றும் ரயில் சார்ந்த பணியில் ஈடுபடும் ஊழியர்கள், தங்களது வாக்குகளைச் செலுத்த முடியாத சூழல் ஏற்படும். இது 100 சதவீத வாக்குப் பதிவுக்கு பின்னடைவாகும். இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு தமிழகம், கேரளாவில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ராம்குமார் கூறியது: கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் நிலையில், தமிழகம், கேரளாவில் மட்டும் பணியில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்கு மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இரு மாநிலங்களிலும் பிற மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்கு உரிமை இருக்கும்பட்சத்தில் ரயில்வே தொழிலாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையமோ 100 சதவீத வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது வேடிக்கையாக உள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ரயில்வே தொழிலாளர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில் சார்ந்த பணியாளர்கள், மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய ஊழியர்கள், பணியாளர்கள் அனைவரும் அஞ்சல்வாக்கு உரிமையைப் பெற்றிருந்தனர். அது மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களில் மட்டும்ரயில்வே பணியாளர்கள் அஞ்சல்வாக்கு பதிவு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யவேண்டும்.
இவ்வாறு தொழிற்சங்கநிர்வாகி ராம்குமார் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
விளையாட்டு
32 mins ago
தமிழகம்
26 mins ago
க்ரைம்
27 mins ago
உலகம்
55 mins ago
தமிழகம்
57 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago