தேர்தல் பத்திர நிதி: பாஜக மீது புதுச்சேரி காங்கிரஸ் அடுக்கும் சந்தேகங்கள்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக நிதி வாங்கியிருக்கும் நபர்களை எல்லாம் பார்க்கும்போது, அதில் சந்தேகம் வரக்கூடிய அளவில் இருக்கின்றது” என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி விசிக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை கண்டித்தும், சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, “பாஜக அதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தால்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வாங்கியிருக்கின்றனர். அவர்கள் நிதி வாங்கியிருக்கும் நபர்களை எல்லாம் பார்க்கும்போது அதில் சந்தேகம் வரக்கூடிய அளவில் இருக்கின்றது. அந்த நிதி வந்தவுடன் அதனை பணமாக மாற்றி உடனே எடுத்துள்ளனர். ஏன்? அவ்வளவு அவசரமாக எடுக்க வேண்டிய காரணம் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

எடுத்த பணத்தை அவர்கள் என்ன செய்திருக்கின்றனர் என்ற கணக்கையும் அவர்கள் தரவில்லை. எனவே, முழுமையான கணக்கை பாஜக தர வேண்டும். இந்த பணத்தை எப்படி வாங்கினார்கள். எவ்வளவு வந்தது, எவ்வளவு செலவு செய்திருக்கின்றனர் என்பதை அவர்கள் காட்ட வேண்டும். மேலும் பணத்தை தந்தவர்கள் எந்த நேரத்தில் அதனை தந்திருக்கின்றனர் என்பதையும் பார்க்க வேண்டும். அந்த நிதி தருகின்ற முன்போ, பின்போ அரசாங்கத்தின் மூலம் அவர்களுக்கு கிடைத்த பயன்களைப் பற்றி ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஏனென்றால், இவர்கள் எப்போதுமே ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாகவும் அல்லது பின்பாகவும் அந்த பணத்தை பெற்றிருக்கின்றனர் என்பதுதான் பெரிய குற்றச்சாட்டு. இன்றைய தினம் ரூ.6 ஆயிரம் கோடி என்பது சாதாரண தொகையல்ல. இதில் நூறு மடங்கு அளவு தவறு நடந்திருக்கிறது என்பதைத்தான் சொல்ல வேண்டும். நூறு மடங்கு இருந்தால்தான் 1 சதவீதமாவது அவர்கள் கமிஷன் தந்திருப்பார்கள் என்பது உண்மை. கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு அவர்கள் ஊழல் செய்திருக்கின்றனர் என்பது தான் இதனுடைய வெளிப்பாடு என்று சொல்ல வேண்டும்.

இதில் முழுமையாக அமலாக்கத் துறையும், வருமான வரித் துறையும் அவர்களுக்கு முனைப்பாக இருந்துள்ளனர். பணம் தந்தவர்களை வற்புறுத்துவது, வாங்குவது, மிரட்டுவது என்ற நிலையில் இவ்விரண்டு துறையும் செயல்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டு துறைகளின் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைக்கு ஒரு விசாரணை தேவையான ஒரு காலம் தேவை என்பது வந்திருக்கிறது.

தமிழகத்தில் ஒரு அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்திருக்கின்றனர். அவரிடத்தில் பணம் இருந்திருக்கின்றது. அதற்குண்டான அடிப்படை ஆதாரங்கள் இருக்கின்றது. எனவேதான் அவர்கள் மீது முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நீதிபதி தலைமையில் தனி ஒரு அமைப்பை உருவாக்கி முழுமையான விசாரணை செய்ய வேண்டும்” என்றார்.

அப்போது சிறுமி கொலை சம்பவத்தை எதிர்கட்சிகள் அரசியலாக்க பார்க்கிறது என பாஜக தலைவர் குற்றம்சாட்டியது குறித்து கேட்டபோது, “முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 56 வயதுடைய நபர் குற்றமற்றவர் என்று சொல்லக் கூடிய அளவுக்கு பாஜவுக்கு துணிச்சல் வந்திருக்கிறது.

அந்தக் கொலையாளிக்கு முழுமையான தண்டனை வாங்கிக் கொடுக்கின்றோம் என்று அவர்களால் தெளிவாக சொல்ல முடியவில்லை. அதற்கு என்ன காரணம்? அந்த கொலையாளிக்கு தூக்கு தண்டனை தர வேண்டும். குறைந்த தண்டனை கொடுக்கக் கூடாது என்பது தான் மக்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் இவர்கள் அவரை எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்படி பேசி வருகின்றனர்" என்று வைத்திலிங்கம் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

18 mins ago

க்ரைம்

49 mins ago

இந்தியா

53 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்