திருப்பதி அருகே ஒண்டிமிட்டா என்ற இடத்தில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 5 பேர், சேலம் மாவட்டத்தில் உள்ள மலைகிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மைசூரில் காபி தோட்டங்களில் வேலை செய்வதற்காக சென்றவர்கள் என்று அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை தமிழகம் கொண்டு வருவதற்கு வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடத்தில் ஏரியில் 5 பேரின் சடலங்களை நேற்று அம்மாநில போலீஸார் கண்டெடுத்தனர். வனத்தை ஒட்டிய பகுதியில் இருந்த ஏரியில் அவர்களது சடலங்கள் இருந்ததால் செம்மரம் கடத்தலுக்குச் சென்றவர்கள் தப்பிக்க முயன்றபோது ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆனால், சடலமாக இருந்தவர்களின் உடல்களில் காயங்கள் இருந்ததுடன் அவர்களது பைகளும் நீரில் மிதந்ததால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. இதனிடையே, சடலமாக மீட்கப்பட்ட 5 பேர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில போலீஸாரிடம் இருந்து சேலம் மாவட்ட போலீஸாருக்கு நேற்று தகவல் வந்தது. உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் வட்டத்தில் உள்ள கருமந்துறை மலை கிராமத்தின் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மலை கிராமங்களை சேர்ந்தவர்கள்
5 பேரும் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையை அடுத்த அடியானூர் கிரான்காடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் (42), ஜெயராஜ் (25), முருகேசன் (42), சின்னபையன் (45) மற்றும் கீழாவரை கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் (23) ஆகியோர் ஆவர். கருமந்துறை காவல் நிலையத்தினர், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை அவர்களது குடும்பத்தினரிடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘கருமந்துறை சுற்று வட்டார மலைக்கிராமங்களைச் சேர்ந்த முருகேசன், ஜெயராஜ் உள்ளிட்டோர் மைசூருக்கு மிளகு தோட்டத்தில் பணிபுரியச் சென்றனர்.
மலைக்கிராமங்களில் வேலைவாய்ப்பு இல்லாததால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு வேலைவாய்ப்பு தேடிச் செல்கின்றனர். அதுபோல, மைசூருக்கு சென்றவர்களில் 5 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்துவிட்டது தற்போது போலீஸார் மூலம் தெரியவந்துள்ளது’ என்றனர்.
கிரான்காடு முருகேசனுக்கு உண்ணாமலை என்ற மனைவியும், பழனியம்மாள் (22), மீனா (20), ரோஜா (19) என்ற 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் ரோஜாவுக்கு திருமணமாகவில்லை.
ஜெயராஜ் என்பவருக்கு கரியா (22) என்ற மனைவியும், வனிதா (3), தினேஷ் என்ற 5 மாத குழந்தையும் உள்ளனர். மற்றொரு முருகேசனுக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், மணிகண்டன், அசோக், ஐஸ்வர்யா என 3 குழந்தைகள் உள்ளனர். கருப்பண்ணன் திருமணமாகாதவர். சின்னபையன் என்பவருக்கு கண்ணம்மாள்(35) என்ற மனைவி, சந்தோஷ்(7), சதீஷ்(5), சிவநேசன் (3) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
ரூ.3 லட்சம் நிதி
பெத்தநாயக்கன் பாளையம் வட்டாட்சியர் ஷர்புனிஷா உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். உயிரிழந்தவர்களின் சடலத்தை சேலம் கொண்டு வர வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 mins ago
ஜோதிடம்
8 mins ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
13 mins ago
இந்தியா
17 mins ago
சினிமா
41 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
25 mins ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago