ராமேசுவரம்: கச்சத்தீவில் பிப்.23, 24-ல் நடைபெற உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ் வந்துள்ளது. திருவிழாவில் பங்கேற்க விரும்பு வோர் பிப்.6-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்திலிருந்து கச்சத்தீவு 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக் நீரிணை’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.
1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது. கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்துக் காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் இங்கு வழிபாடு நடத்துவர்.
ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம், ராமேசுவரம் பங்குத் தந்தை சந்தியாகுவுக்கு அனுப்பியுள்ளார்.
தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2024–ம் ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப்.23 அன்று மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும். தொடர்ந்து சிலுவைப் பாதை நிகழ்ச்சியும், இரவு தேர்ப் பவனியும் நடைபெறும்.
பிப்.24-ம் தேதி காலை சிறப்பு பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும். பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடையும். கச்சத்தீவுக்குப் பக்தர்களை ஏற்றிச்செல்லும் படகுகளின் உரிமையாளர்கள் ராமேசுவரம் சூசையப்பர் ஆலய வளாகத்தில் உள்ள கச்சத்தீவு திருப்பயண அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்பத்துடன் படகின் வாகனப் பதிவுப் புத்தகம் (ஆர்.சி), படகுக்கான காப்பீடு ஆவணம், படகு உரிமையாளரின் மார்பளவுப் புகைப்படம் ஆகியவற்றின் 3 நகல்களை இணைத்துப் பதிவுசெய்து கொள்ளவேண்டும். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கச்சத்தீவு திருப்பயண அலுவலகத்தில் பிப்.6. மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், படகுகளின் உரிமையாளர்கள் மூலம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தடையில்லா சான்று: விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் 5 வயது முதல் 70 வயது உள்ளவர்கள் 3 மார்பளவுப் புகைப்படங்கள், ஆதார் அட்டையின் நகல், பக்தர் வசிக்கும் ஊருக்கான காவல் நிலையத்தில் பெறப்பட்ட தடையில்லாச் சான்றை படகு உரிமையாளரின் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் திருவிழாவில் கலந்துகொள்வதாக இருந்தால் தங்கள் அலுவலகத்தில் தடையில்லாச் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி கிடையாது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago