பாலமுருகனடிமை சுவாமிக்கு 2024-க்கான திருவள்ளுவர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: 2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், 2023-ம் ஆண்டுக்கான அண்ணா விருது, காமராசர் விருது,மகாகவி பாரதியார் விருது,பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெறும் விருதாளர்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழால் விளங்கிடும் தமிழக அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புக்களையும் அளித்து, அவர்தம் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறது.

அவ்வகையில், பள்ளி மாணவர்களுக்கு 1983-ம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவச் செல்வங்களுக்கு விழா எடுத்து ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கியும் உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இரு முறை நடத்தி தமிழ்த் தொண்டாற்றி வரும் பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2024ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.

பேரறிஞர் அண்ணாவின் முதன்மைத் தொண்டர் என பாராட்டப்பட்டவரும், 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான பத்தமடை பரமசிவத்துக்கு 2023-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதினை வழங்குகிறது.தேசியத் தமிழ்க் கவிஞர் பேராயம், சிலப்புச் செல்வர் ம.பொ.சியைக் கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கியவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான உ. பலராமனுக்கு 2023-ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை வழங்குகிறது.

மேலும், தமிழக அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் கேரள மாநில அரசின் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவுக்கு கவிதைகளைப் படைத்த கவிஞர் பழனி பாரதிக்கு 2023-ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருதினை வழங்குகிறது.

மறைந்த முதல்வர் கருணாநிதியால் முத்தரசனாரின் "கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன்" என்று பாராட்டைப் பெற்றவரும் தமது 92-வது அகவையிலும் தனித்தமிழ் வேட்கை அகலாமல் அருந்தமிழ்ப்பணியாற்றி வரும் எழுச்சிக் கவிஞர் ம.முத்தரசுக்கு 2023-ம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதினை வழங்குகிறது.

பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களைத் திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனுக்கு 2023-ம் ஆண்டுக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதினை வழங்குகிறது.

தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக யாத்தளித்த முனைவர் இரா.கருணாநிதிக்கு 2023-ம் ஆண்டுக்கான முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை வழங்குகிறது.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இவ்விருதுகள் தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளன, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2023ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபண்டியனும், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.சண்முகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் நாளை (சனிக்கிழமை) விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார். விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாயுடன், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் விவரம் > சுப.வீரபாண்டியனுக்கு ‘பெரியார் விருது’, பி.சண்முகத்துக்கு ‘அம்பேத்கர் விருது’ - தமிழக அரசு அறிவிப்பு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்