பி
ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப தமிழ் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாகவே இருக்கின்றனர். மலேசியத் தமிழர்களின் தமிழிலக்கியப் பணிகளும் அவ்வாறே அமைந்துள்ளன. அவர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் கவிஞர் சி.வேலுசுவாமி (2.4.1927 - 24.5.2008)
மலேசியாவில் தமிழாசிரியராக பணியாற்றிய வேலுசுவாமி பன்முகத் திறமைகொண்டவர். எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பலமுனைகளில் செயல்பட்டுள்ள வேலுசுவாமி, திருக்குறளுக்கு உரையெழுதியுள்ளார். தமிழ் - மலாய் - ஆங்கில அகராதியையும் உருவாக்கியவர். சிறந்த பாட நூல்களை எழுதிய இவர், கலைமகள், தீபம், மஞ்சரி, தமிழ்முரசு, தமிழ்நேசன் போன்ற இதழ்களில் பல கதைகள் எழுதியுள்ளார். இவரது ‘மீனாட்சி’ என்ற சிறுகதை தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.
மலேசியாவில் ஒரு சில பதிப்பகங்களே இருந்த நிலையில் திருமகள் அச்சகம், திருமகள் பதிப்பகம், சரவணபவன் பதிப்பகம் என்று நூல்வெளியீட்டகங்களையும் நடத்தியுள்ள இவர், சந்திரன் என்கிற புனைபெயரில் ‘நற்றமிழ் துணைவன்’ என்ற மாணவர்களுக்கான பயிற்சி நூல்களையும் உருவாக்கியுள்ளார்.
சரவணபவன், சந்திரன், தமிழ்வாணன், கவிதைப்பித்தன், இளங்கவிஞன், ஏச்சுப்புலவன் உள்ளிட்ட பல பெயர்களில் வேலுசுவாமி பல துறை நூல்களை எழுதி பதிப்பித்துள்ளார். இப்படைப்புகள் அத்தனையும் மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவின.
‘திருமகள்’ என்ற பெயரில் மாணவர் இதழையும் ‘பக்தி’ என்ற சமய இதழையும் நடத்தியிருக்கிற இவர், பல்வேறு ஆன்மிக நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
பாட்டுப்பாடலாம், நான் பாடும் பாட்டு, தேனீயைப் பாரீர், பாட்டெழுதப் பழகுங்கள், அருள்புரிவாய் போன்ற தலைப்புகளில் இவர் வெளியிட்ட குழந்தைப் பாடல் நூல்கள் சிறந்த படைப்புகளாகும்.
மலேசிய மண்ணில் ‘மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்’ என்கிற அமைப்பைத் தோற்றுவித்து, அதன் செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர். பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை மலேசியாவில் நடைமுறைப்படுத்துவதில் பெரும்பங்காற்றியவர் வேலுசுவாமி.
- பேராசிரியர் மு.இளங்கோவன்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஆன்மிகம்
9 hours ago
கருத்துப் பேழை
10 hours ago