தமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடக்கம்: ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.

கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது. ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய விசாரணையில், அவர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவரது கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் எதிரொலியாக, தமிழகத்தில் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த, காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். அதன்படி, அப்பிரிவை உருவாக்கும் பணியில் தமிழக காவல் துறை உயர் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

முதல் கட்டமாக, நாட்டில் தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்பாட்டில் உள்ள ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் சென்று, அப்பிரிவு செயல்படும் விதம், அவர்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள், காவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சேகரித்தனர்.

பின்னர், இந்த சிறப்பு பிரிவுக்கான வரைவு திட்டத்தை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான போலீஸார் தயாரித்து அனுமதிக்காக தமிழக அரசிடம் வழங்கினர்.

ஒரு பயிற்சி பள்ளி தொடங்கி, 18-22 வயதுடைய திறமையான, துணிச்சல்மிக்க இளைஞர்களை காவல் துறையில் இருந்து தேர்வு செய்வது, இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, நெல்லை ஆகிய 4 நகரங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவை தொடங்குவது என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தமிழக காவல் துறையின் நுண்ணறிவு பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவை தொடங்க அனுமதி அளித்து தமிழக உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.60.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுக்கு காவல் துறையில் இருந்து 190 பேரை தேர்வு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டிஐஜி தலைமையில் செயல்படும்: புதிதாக உருவாக்கப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவு, டிஐஜி தலைமையில் செயல்படும். இப்பிரிவில் 4 எஸ்.பி.க்கள், 5 கூடுதல் எஸ்.பி.க்கள், 13 துணை எஸ்.பி.க்கள்,31 காவல் ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள், 12 தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளர்கள், 130 தலைமை காவலர்கள், 93 காவலர்கள், 33 காவல் துறை ஓட்டுநர்கள் ஆகியோர் பணியாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரசாணையை தொடர்ந்து, இந்த பிரிவுக்கென்று டிஐஜி அந்தஸ்தில் ஒரு அதிகாரி விரைவில் நியமிக்கப்பட உள்ளார். அவரது நியமனத்துக்கு பிறகு மற்றவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

க்ரைம்

11 mins ago

தமிழகம்

37 secs ago

கல்வி

8 mins ago

உலகம்

19 mins ago

இணைப்பிதழ்கள்

33 mins ago

க்ரைம்

38 mins ago

க்ரைம்

45 mins ago

உலகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

மேலும்