“சனாதனம் பற்றிய பகுதியை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” - கி.வீரமணி

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: அறிவியல் மனப்பான்மையை வளர்க்கத் தடையாக உள்ள சனாதனம் பற்றிய பகுதியை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

திராவிடர் கழகத்தின் தருமபுரி மாவட்ட முன்னாள் தலைவர் புலவர் இரா.வேட்ராயன் அண்மையில் மறைந்தார். இந்நிலையில், அவரது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியில் திராவிடர் கழகம் சார்பில் வேட்ராயன் படத் திறப்பு விழா இன்று (செப்.27) நடந்தது. பாப்பாரப்பட்டி பி.கே.எஸ் மகாலில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு தி.க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோவிந்த ராஜ் வரவேற்றார். தலைமைக் கழக அமைப்பாளர் ஜெயராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வேட்ராயனின் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் புகழ் வணக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: "ஆசிரியர் வேட்ராயன் திராவிடர் கழகக் கொள்கைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பெண்களை மதித்தல் உள்ளிட்ட பெரியார் சிந்தனைகளை தன் குடும்பத்திலும் செயல்படுத்தியவர். ஆனால், இன்று இருப்பவர்கள் கடவுளுக்கு மேலாக பெண்களை மதிக்கிறோம் என்று கூறிக்கொண்டு பெண்களுக்கான இடஒதுக்கீடு 2034-ல் தான் நடைமுறைக்கு வரும் என்கின்றனர்.

ஓதுவார்கள் தொடர்பாக பெரியார் தன் நெஞ்சில் தைத்துள்ளதாக கூறிய முள்ளை முன்னாள் முதல்வர் கருணாநிதி எடுத்தார். இன்றைய முதல்வரோ தற்போது பெண்களையும் ஓதுவார்களாக்கி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியதுடன் அந்த இடத்திலே பூவை வைத்துள்ளோம் என்று கூறியிருக்கிறார். இதற்காக பொறாமைப்பட்டு சிலர் நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். பெரியார் கொள்கையை ஏற்றுக்கொள்வோருக்கு லாபம் தான் ஏற்படுமே தவிர நட்டம் எதுவும் ஏற்படாது. எனவே, அனைவரும் பகுத்தறிவுடன் அணுகி வாழ்க்கையை திட்டமிட்டு வாழுங்கள்" என்று பேசினார்.

தொடர்ந்து, செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், பாடப் புத்தகத்தில் சனாதனம் குறித்த பகுதி இடம்பெற்றிருப்பது குறித்து கூறும்போது, "கடந்த கால ஆட்சியின் ஒரு தெளிவற்ற சூழலால் பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற செய்தி அது. தேவையில்லாதவற்றை பகுத்தறிவு அடிப்படையில் கண்டறிந்து நீக்க வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று அறிவியல் மனப்பான்மையை பரப்ப வேண்டும் என்பதாகும். அந்த அறிவியல் மனப்பான்மையை பரப்ப இது இடையூறாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும்" என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்ப சேகரன், முன்னாள் மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 mins ago

இந்தியா

26 mins ago

சுற்றுலா

18 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

9 mins ago

மேலும்