புத்தாண்டு கொண்டாட்டம் என்ற போர்வையில் மது போதையில் வாகனம் ஓட்டினால், பைக் ரேஸில் ஈடுபட்டு சிக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சிக்குபவர்கள் பாஸ்போர்ட் வாங்க முடியாது என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
சமீபகாலமாக சென்னையில் இருசக்கர வாகனம் அதிகரித்து வருகிறது. அதிலும் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார் பைக்குகள் சந்தையில் நுழைந்துள்ளன. இதன் காரணமாக சென்னையில் சாலைகளில் செல்லும் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடுவதும், பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது.
புத்தாண்டு இரவு போதையில் வாகனம் ஓட்டுவது, பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாகி வருகிறது. 2017-ல் போலீஸார் எவ்வளவோ கெடுபிடிகள் செய்தும் 8 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
போக்குவரத்து கூடுதல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண், விபத்தில்லா புத்தாண்டாக இந்த ஆண்டை அனுசரிக்க உத்தேசித்து கடும் கட்டுபாடுகளை விதிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து போக்குவரத்து போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு 9 மணி முதல் புத்தாண்டு அதிகாலை 3 மணி வரை சென்னை முழுதும் கடுமையான போக்குவரத்து நடைமுறைகளுக்கு கீழ் கொண்டுவர உத்தேசித்துள்ளனர்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்துகள், போக்குவரத்து மீறல்கள், எதில் தவற விட்டோம் என்பதை எல்லாம் ஆய்வு செய்த போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி அதிக விபத்துகள், பைக் ரேஸ்கள் நடக்கும் இடங்கள், புத்தாண்டு என்பதால் போலீஸாரும் கண்டுகொள்ளாமல்விடுவது போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த ஆண்டு செயல்பட போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
என்னதான் போலீஸார் நடவடிக்கை எடுத்தாலும் கடற்கரை சாலைக்குள் நுழைந்து சர்வீஸ் லேனில் வாகனங்களை நிறுத்திவிட்டு புத்தாண்டு நேரத்தில் வெளியே வந்து போலீஸாரை ஏமாற்றிவிட்டு செல்வது இந்த ஆண்டு நடக்காது. கடற்கரை சாலையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணிவரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
அதுமட்டும் அல்லாமல் கடற்கரைக்கு முன்னரே வரும் வாகனங்கள் தடுக்கப்படுகிறது. கடற்கரை எங்குமே வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்த 8 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தங்களை போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். ராணிமேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி, சிவானந்தா சாலை, லாயிட்ஸ் சாலை, வெலிங்கடன் பள்ளி, தீவுத்திடல் மைதானம், விக்டோரியா ஹாஸ்டல் சாலை உள்ளிட்ட 8 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டுமே வாகனம் நிறுத்த வேண்டும்.
இதே போல் புத்தாண்டு அன்று மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரை சாலைகளிலும் கொண்டாட்டங்களின் போது வாகனங்கள் அனுமதிக்கப்படாது. கண்டபடி சென்னையில் வாகனங்களை இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்திலும், நடவடிக்கை எடுக்க வசதியாக சென்னையில் 176 இடங்களில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.
இதற்காக அன்று இரவு மட்டும் 3800 போக்குவரத்து போலீஸார், அவர்களுக்கு உதவியாக ஆயுதப்படை போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவ 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ சேவைக்காக தயார் நிலையில் இருக்கும். இது தவிர சட்டம் ஒழுங்கு போலீஸார் தனியாக கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
புத்தாண்டு இரவு விபத்துகள் அதிகம் நடப்பது பாலத்தின் மீது வேகமாக செல்லும் போது என்று கண்டறியப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு சென்னையில் உள்ள அனைத்து பாலங்களும் இரவு 9 மணிமுதல் மூடப்படும். சென்னை ஜெமினி மேம்பாலம், கத்திபாரா பாலம் தவிர அனைத்து பாலங்களும் மூடப்படும். ஈசிஆர் சாலைக்கு தனியாக கவனம் செலுத்த உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில்லா புத்தாண்டு என்ற நோக்கத்துடன் இந்த புத்தாண்டை அனுஷ்டிக்க போக்குவரத்து போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ள போலீஸார் புத்தாண்டு அன்று போலீஸார் எச்சரிக்கையை மீறி பைக் ரேஸில் ஈடுபட்டாலோ, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை ஓட்டினாலோ, மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டினாலோ போலீஸார் கடுமையாக நடவடிக்கை எடுப்பார்கள்.
அவ்வாறு சிக்குபவர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட விஷயங்களுக்காக தடையில்லா சான்று போலீஸார் தரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டை ஒட்டி போலீஸாரின் நடவடிக்ககள் வருமாறு:
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட கடற்கரை காமராஜர் சாலையில் வாகனங்கள் வர இரவு 9 மணி முதல் தடை.
அதற்கென உள்ள 8 வாகன நிறுத்தங்களில் வாகனத்தைவிட்டு வரவேண்டும்.
176 வாகன சோதனை சாவடிகள் மூலம் போலீஸார் சாலை தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை சீரமைக்க உள்ளனர்
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ, பைக் ரேசில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை
கத்திபாரா, ஜெமினி மேம்பாலம் தவிர சென்னையில் உள்ள அனைத்து பாலங்களும் இரவு 9 மணி முதல் மூடப்படும்.
ஈசிஆர் சாலை, பெசண்ட் நகர் கடற்கரையிலும் கட்டுப்பாடு அதிகம்.
மோட்டார் வாகனங்கள் தவிர கார்களில் மது அருந்திவிட்டு ஓட்டுபவர்களை கண்காணித்து பிடிக்க உத்தரவு.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ, பைக் ரேஸில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை, அவர்கள் பாஸ்போர்ட் பெறவோ, ரினியூவல் செய்யவோ போலீஸார் தடையில்லா சான்று தரமாட்டார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
13 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
இந்தியா
14 hours ago