சென்னை: கீழடி குறித்த ஆய்வறிக்கையை மத்திய அரசுதான் வெளியிட முடியும். கீழடி நகரம் அழிவதற்கு இயற்கை சீற்றங்கள் காரணமல்ல என்று இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பு ஆய்வாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில், தொல்லியல் துறை எச்சங்களுக்கு எவ்வாறு புவியியல் ரீதியான ஆய்வு முடிவுகள் உதவுகின்றன என்பது குறித்த 2 நாள் கருத்தரங்கம், பல்கலை. வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இந்நிகழ்வுக்கு, துறையின் தலைவர் முனைவர் ஜே.சவுந்தரராஜன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் ‘தமிழ்நாட்டின் தொல்லியல் சின்னங்கள்’ என்ற புகைப்பட கண்காட்சியும், பழங்காலப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு ஆய்வாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடியில் 4 கட்ட அகழாய்வு ஆராய்ச்சிகள் முடிந்த நிலையில் 982 பக்கங்களைக் கொண்ட அதன் முழு அறிக்கையானது மத்திய அரசிடம் கடந்த ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
கீழடி குறித்த ஆய்வறிக்கையை மத்திய அரசுதான் வெளியிட முடியும். எங்களது அறிக்கையில் எந்த மாறுதலையும் மத்திய அரசு செய்ய முடியாது. இந்த அறிக்கையில் கீழடியில் 2 ஆண்டுகளில் கிடைத்த பொருட்கள், தரவுகள், கீழடியின் தொன்மையை எவ்வாறு கால கணிப்பு செய்தோம் என்பதற்கான ஆதாரங்களும் இடம்பெற்றுள்ளன.
1,100 ஆண்டுகால வரலாறு: கீழடி என்ற நகரம் கி.மு 800-ல் இருந்து கி.பி 300 வரை இருந்ததற்கான தரவுகள் நமக்கு கிடைத்துள்ளன. ஆனால் கி.பி 1,000 வரையாவது இந்நகரம் இருந்திருக்க வேண்டும். ஒரு நகரம் அழிய பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் கீழடி நகரம் அழிவதற்கு இயற்கை சீற்றங்கள் காரணமல்ல. இந்த ஆய்வறிக்கை வெளியாகும்போது கீழடியின் 1,100 ஆண்டுகால வரலாறு தெரியவரும்.
தற்போதைய மதுரை நகரம் கி.பி 9-ம் நூற்றாண்டுதான் உருவாகியுள்ளது. எனவே கீழடியில் இருந்த மக்கள் அங்கிருந்து படிப்படியாக குடிபெயர்ந்து தற்போதைய மதுரை நகரை உருவாக்கி இருக்க வேண்டும். புதைப்பிடங்களை அதிகம் ஆய்வு செய்கிறோமே தவிர, அதைச் சார்ந்த வாழ்விடங்களை நாம் சரியாக ஆய்வு செய்வதில்லை. புதைப்பிடம் வாழ்விடத்தின் ஒரு பகுதி மட்டுமே.
மக்களின் வாழ்விடப் பகுதிகளை ஆய்வு செய்தால்தான் அந்த மக்களின் வாழ்க்கை முறையை தெரிந்துகொள்ள முடியும். வைகை, தாமிரபரணி என தனித்தனி நதிப்பகுதியாக பார்க்காமல், தென்னிந்திய நதிகளை ஒட்டிய அனைத்து இடங்களிலும் ஆய்வுகளை செய்ய வேண்டும். அதன்மூலம் பல்வேறு வரலாற்று தகவல்கள் கிடைக்கும். தேனி மாவட்டத்தில் புதிய தொல்பொருள் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக விண்ணப்பித்து இருக்கிறோம்.
காஞ்சிபுரத்தின் வரலாறு: சென்னை பல்கலைக்கழகம் இதுவரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வுகளை நடத்தியிருக்கிறது. காஞ்சிபுரத்தில் 6 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகளை பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும். காஞ்சிபுரத்தின் வரலாற்றை அறிய வேண்டும் என்றால் சென்னை பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டால் மட்டுமே தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் இந்திய தொல்லியல் துறை ஆய்வக இயக்குநர் டி.ஸ்ரீ லட்சுமி, சி.பி.ராமசுவாமி ஐயர் அறக்கட்டளை தலைவர் நந்திதா கிருஷ்ணன், சென்னை பாரம்பரிய கல்விக்கான சர்மா அமைப்பின் நிறுவனர் சாந்தி பாப்பு, சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் ஷைக் முகமது ஹுசைன், பேராசிரியர் எம்.சுரேஷ் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
2 mins ago
வாழ்வியல்
3 mins ago
வாழ்வியல்
12 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
27 mins ago
சுற்றுச்சூழல்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago