கடுமையான சட்டங்கள் இருந்த போதும் குழந்தை திருமணங்கள் குறையவில்லை: சைல்டு லைன் இயக்குநர் ராஜாமுகமது

By பி.டி.ரவிச்சந்திரன்

உலக அளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் 33 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கிறது. கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும் இந்தியாவில் குழந்தை திருமணங்கள் குறையவில்லை என்று கொடைக்கானல் சைல்டு லைன் இயக்குநர் ராஜாமுகமது தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1891-ம் ஆண்டு ஜனவரியில் சட்ட முன்வடிவாக வைக்கப்பட்டு 1929 செப்டம்பரில் குழந்தை திருமண தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின் இச்சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போதுள்ள சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18, ஆணின் திருமண வயது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதைவிட குறைவான வயதுள்ளவர்களுக்கு திருமணம் செய்துவைத்தால், சம்பந்தப்பட்டோருக்கு ரூ.1 லட்சம் அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது.

சிறுமிகளை வற்புறுத்தியோ அல்லது தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோ நடத்தப்படும் திருமணங்கள் செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 33 சதவீதம்

உலக அளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் 33 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கிறது என ஆக்சன் எய்டு இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

உலக அளவில் ஒரு நிமிடத்தில் 28 பெண் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதனால் பெண் கல்வி பாதிக்கப்படுகிறது. இளம் வயதில் தாயார் ஆவதால் உடல் பலவீனமடைகிறது. குழந்தை திருமணம் செய்துகொண்ட சிறுமிகளில் 28 சதவீதம் பேர் பிரசவத்தின்போது உயிரிழக்கின்றனர்.

இந்தியாவில் குழந்தை திருமணங்களை தடுக்க ‘சைல்டு லைன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 1098 என்ற இலவச தொலைபேசி மூலம் குழந்தை திருமணம் குறித்த தகவலை தெரிவித்தால், சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து திருமணத்தை நிறுத்த சட்டரீதியான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.

51 சிறுமிகளுக்கு திருமணம்

இதுகுறித்து கொடைக்கானல் ‘சைல்டுலைன்’ திட்ட இயக்குநர் ராஜாமுகமது கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் வறுமை காரணமாக அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதியில் மட்டும் இந்த ஆண்டு அக்டோபர் வரை 11 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். சமீபத்தில் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் 800 குடும்பத்தினரிடம் அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் ஆய்வு நடத்தினர். அதில், 51 சிறுமிகளுக்கு திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது.

இதுபோன்ற குழந்தை திருமணங்களை தடுக்க கடும் முயற்சி எடுத்தாலும் பெற்றோர் யாருக்கும் தெரியாமல், ரகசியமாக இரவு நேரத்தில் திருமணத்தை நடத்தி விடுகின்றனர். இன்னும் சிலர், திருமணம் என்று கூறாமல், வேறு நிகழ்ச்சியின் பெயரில் திருமணத்தை நடத்தி விடுகின்றனர்.

சட்டம் கடுமையாக்கப்பட்ட போதும், இந்தியாவில் குழந்தை திருமணங்கள் குறையாத நிலையே காணப்படுகிறது என்றார்.

பாலியல் வழக்கில் கைது

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: குழந்தை திருமணத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். போலீஸாருடன் இணைந்து சமூக நலத் துறை, சைல்டு லைன் உள்ளிட்ட அமைப்புகள் குழந்தை திருமணத்தை தடுக்கும் பணியை மேற்கொள்கின்றன.

18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை திருமணம் செய்தால், சம்பந்தப்பட்டவரின் மீது பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யவும் தற்போது வாய்ப்பு உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

23 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்