சென்னை அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான சீட்டு கேட்டு அலைக்கழிக்கப்படுவதால் உடனடியாக சிகிச்சைப் பெற முடியாமல் காய்ச்சல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
சென்னை சென்ட்ரலில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 300 படுக்கைகளுடன் கூடிய காய்ச்சல் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து தினமும் சுமார் 100 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகமே டெங்கு காய்ச்சலின் தாக்கத்தில் உள்ளது.
தனியாக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருந்தாலும், காய்ச்சலுடன் வரும் ஏழை நோயாளிகள் எளிதாக அனுமதிக்கப்படுவதில்லை. அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சலுடன் வரும் நோயாளிகளிடம் புறநோயாளிகள் சீட்டு கேட்டு தொந்தரவு செய்யாமல் உடனடியாக அவர்களை அனுமதித்து சிகிச்சைப் அளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சீட்டு வாங்கிய பின்னரே காய்ச்சல் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நோயாளிகள் அவதி
திருவள்ளூர் மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் மணி, முருகன், அனிதா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற உறவினர்களுடன் நேற்று காலை 7 மணிக்கு இந்த மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் நீண்ட வரிசையில் சுமார் 9 மணி வரை காத்திருந்திருந்தனர். சீட்டு வாங்கும் நேரத்தில், காய்ச்சலுக்கு என்று தொடங்கப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவில் சென்று சீட்டு வாங்கு மாறு அனுப்பிவிட்டனர்.
அரை மணி நேரம் அலைந்து திரிந்து 9 மணிக்கு டவர்-2 கட்டிடத்தின் தரைத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த காய்ச்சலுக்கான புறநோயாளிகள் பிரிவைக் கண்டுபிடித்தனர். அங்கு 9.30 மணி வரை காத்திருந்து சீட்டு வாங்கிய அவர்கள், 2-வது தளத்தில் அமைக்கப்பட்டிருந்த காய்ச்சல் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். பல இன்னல்களுக்கும், சிரமத்துக்கும் ஆளாகும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சிலர் அரசு மருத்துவமனையே வேண்டாம் என முடிவெடுத்து தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுவிடுகின்றனர். சிலர் மருத்துவமனையில் அனுமதி பெற்றும், சிகிச்சைப் பெற விருப்பம் இல்லாமல், புறநோயாளிகள் பிரிவிலேயே சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர்.
47 பேருக்கு டெங்கு சிகிச்சை
மருத்துவமனை டீன் நாராயணபாபுவிடம் கேட்டபோது, “இந்த மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க காய்ச்சல் சிகிச்சை மையம் 300 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படுக்கையிலும் கொசு வலை உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 298 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 47 பேர் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்கள். தீவிர டெங்குவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் புறநோயாளிகள் சீட்டு வாங்காமல் நேராக வந்து அனுமதியாகலாம். காய்ச்சலுடன் வருபவர்களிடம் புறநோயாளிகள் சீட்டு கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்பதை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்களுக்கு உடனடியாக ரத்த அணு அளவீடு பரிசோதனை செய்யப்படும். சில மணி நேரத்துக்கு பின்னர் டெங்கு பரிசோதனை செய்யப்படும்.
பரிசோதனையில் ரத்த அணு 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு உடனடியாக ரத்தம் ஏற்றப்படும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர், ஓஆர்எஸ் கரைசல், கஞ்சி போன்றவை கொடுக்கப்படுகின்றன.
கடந்த 3 மாதத்தில் 2,950 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்றுள்ளனர். அவர்களில் 490 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தினமும் சுமார் 40 பேர் வீடு திரும்புகின்றனர். 40 முதல் 45 பேர் புதிதாக அனுமதி பெறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 mins ago
விளையாட்டு
12 mins ago
தமிழகம்
36 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago