வழக்குகளில் சிக்கி குப்பை போல குவிக்கப்பட்டுள்ள பழைய வாகனக் குவியலில் டெங்கு கொசு உற்பத்தி: நடவடிக்கை எடுக்க அரசு துறைகளுக்கு மாநகராட்சி கடிதம்

By ச.கார்த்திகேயன்

வழக்குகளில் சிக்கி குப்பை போல குவித்து வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு அரசுத் துறைகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி யுள்ளது.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கடந்த சில நாட்களாக வீடு வீடாகக் சென்று, கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து, அழித்து வருகிறது. இப்பணியில் 17ஆயிரத்துக்கும் அதிகமான மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொசுப் புழுக்கள் அதிக அளவில் இருந்த வீடுகளின் உரிமையாளர்கள் 1,200 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி செவிலியர்கள் 900 பேர், வீடு வீடாகச் சென்று யாருக்கேனும் காய்ச்சல் உள்ளதா என ஆய்வுசெய்து வருகின்றனர்.

இது தவிர, சாலையோரத்தில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த, பயன்படாத வாகனங்களில் தேங்கும் மழை நீரிலும் டெங்கு கொசுக்கள் உருவாவதாக ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சி நோய்கடத்தி கட்டுப்பாட்டு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்துமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கொசு புழுக்கள் உற்பத்தி

இதற்கிடையில், வழக்குகளில் சிக்கும் ஏராளமான வாகனங்கள், சென்னை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குப்பைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் அவற்றிலும் உருவாகின்றன. இதுபோல, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், வழக்குகளில் தொடர்புடைய பழைய வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றிலும் மழைநீர் தேங்கி, அதில் கொசுவாக மாறக் கூடிய லார்வா புழுக்கள் நேற்று அதிக அளவில் காணப்பட்டன.

இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, சென்னை மாநகராட்சிஅதிகாரிகள் கூறியதாவது:

டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். மழைநீர் தேங்கும் வகையில் நிறுத்தப்பட்டிருக்கும் பயனில்லாத பழைய வாகனங்களை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. காவல் நிலையங்கள் மட்டுமல்லாது, நீதிமன்றங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட பல அரசுத் துறைகளிலும் பழுதடைந்த நிலையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காவல், நீதி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ‘பழுதடைந்த வாகனங்களில் நீர் தேங்கி, அதில் கொசுக்கள் உருவாவதை தடுக்க நடவடிக்கை எடுத்து, மாநகராட்சியின் டெங்கு ஒழிப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்