கா
ர் விற்பனையில் முதலிரண்டு இடங்களில் உள்ள மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரிக்க தற்போது அரசு பணியாளர்கள் வசம் கவனத்தைத் திருப்பி உள்ளன. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் மூலம் பணியாளர்களுக்கு நிலுவைத் தொகை (அரியர்ஸ்) பட்டுவாடா செய்யப்பட உள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள அரசு ஊழியர்களை இலக்காகக் கொண்டு பல்வேறு சலுகைகளை இவ்விரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
பொதுவாக ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைத் தருவது ராணுவமும் அரசுத் துறைகளும்தான். தற்போது 7-வது ஊதியக்குழு பரிந்துரையால் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்க உள்ளது. இதன்மூலம் தங்களது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. பொதுவாக ஆட்டோமொபைல் நிறுவன விற்பனையில் ஐந்தில் ஒரு பங்கு அரசு மற்றும் ராணுவம் மூலம் கிடைக்கிறது.
மாருதி சுஸுகி, ஹூண்டாய், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டொயோடா மோட்டார் ஆகிய நிறுவனங்கள் அரசு ஊழியர்களை சந்தித்து தங்களது தயாரிப்புகள் குறித்து விளக்குவதற்கென்று தனி விற்பனைக் குழுக்களை உருவாக்கியுள்ளன. அரசு ஊழியர்களுக்கென விலையில் தள்ளுபடி சலுகை, காப்பீடு வசதி மற்றும் சுலப தவணைத் திட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவது உள்ளிட்ட சலுகைகளை இப்பிரதிநிதிகள் அரசு ஊழியர்களிடம் விளக்கி விற்பனையை அதிகரிக்க முயன்று வருகின்றனர்.
மாருதி சுஸுகி நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலத்தில் இத்துறையினரிடம் மட்டும் ஒரு லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 55% அதிகமாகும்.
ராணுவத்தில் அவரவர் வகிக்கும் பதவிகளுக்கேற்ப வாகனங்களை பரிந்துரை செய்வதாக மாருதி சுஸுகி மூத்த செயல் இயக்குநர் ஆர்.எஸ். கல்சி தெரிவிக்கிறார். இந்த ஆண்டில் 2 லட்சம் வாகனங்களை ராணுவத்தினருக்கு விற்பனை செய்ய மாருதி சுஸுகி இலக்கு நிர்ணயித்துள்ளது.
பொதுவாக ராணுவ வீரர்களுக்கு ஓரளவு சலுகை விலையில் ஆட்டோமொபைல் வாகனங்கள் அளிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது நேரடியாக விற்பனையகங்களிலிருந்து வாங்கும் போக்கும் ராணுவத்தினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதேபோல மாநில அரசு ஊழியர்களும் கணிசமான எண்ணிக்கையில் வாகனங்களை வாங்குவது அதிகரித்துள்ளதாக கல்சி கூறினார். ஹூண்டாய் நிறுவன விற்பனையில் அரசு ஊழியர்களுக்கான விற்பனை பங்களிப்பு 17 சதவீத அளவுக்கு உள்ளது. ராணுவத்தினருக்கான விற்பனை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக விற்பனைச் சந்தைப் பிரிவு இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவாத்ஸவா தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களும், ராணுவத்தினரும்தான் தங்கள் நிறுவனத்தின் பிரதான வாடிக்கையாளர்கள் என்கிறார் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் வீஜே ராம் நாக்ரா. அரசு ஊழியர்களுக்கென இந்நிறுவனம் சர்கார் 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி எஸ்யுவி வாங்கும் அரசு பணியாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, டெலிவரி அளிப்பதில் முன்னுரிமை, எக்ஸ்சேஞ்ச் போனஸ், சிறப்பு நிதி உதவி வசதி, தனி நபர் காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் கிளப் மஹிந்திரா வவுச்சர்களும் வழங்கப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago