நெருக்கடியில் இ-காமர்ஸ் நிறுவனங்கள்

By வாசு கார்த்தி

எங்கே பரபரப்பு இருக்கிறதோ அங்கே இலவச இணைப்பாக பதற்றமும் உருவாகும். இதற்கு தற்போதைய மிகச்சரியான உதாரணம் இ-காமர்ஸ் துறை. இந்த நிறுவனங்களில் அனுதினமும் புதிய முதலீடுகள் வந்துகொண்டு இருந்தாலும், இந்த குமிழ் எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்பது போல செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன.

கடந்த சில வாரங்களில் முக்கியமான இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஆட் குறைப்பு செய்யப்பட்டு வருகிறது. டினிஔல் (tinyowl), ஹவுசிங் டாட் காம், ஸோமாடோ, லோகல்பன்யா, ஹெல்ப்சாட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்ற பெயரில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கி இருக்கிறது. இது போன்ற வளர்ந்து வரும் நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கி இருந்தாலும், இது சந்தையில் பெரும் சர்ச்சையை இது ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம் என்ன?

இந்தியாவில் இப்போதுதான் இ-காமர்ஸ் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. சந்தை வளர்ந்து வரும் சூழ்நிலை இருந்தாலும் இந்த நிறுவனங்கள் இதுவரை லாபம் ஈட்டவில்லை. லாபம் ஈட்டாமல் இந்த நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்ற சந்தேகம் வரலாம். இந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் லாபம் ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துவருகிறார்கள். அதனால் இந்த நிறுவனங்களின் பரிவர்த்தனை நஷ்டத்திலே இயங்குகிறது.

ஏன் நஷ்டத்தில் செயல்பட வேண்டும்?

அனைத்து முதலீடுகளும் கணிப்பின் அடிப்படையிலேயே நடக்கிறது. இந்தியாவின் சந்தை பெரியது, தவிர நாளுக்கு நாள் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்ந்து அதிகமாகி வருகின்றன. இதற்கு ஏற்றது போல ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதும் அதிகமாகி வருகின்றன. இவை அனைத்தையும் பார்க்கும் போது நஷ்டம் அதிகமானாலும் இப்போது பெரும்பாலான சந்தையை கைப் பற்றினால் வரும் காலத்தில் நல்ல லாபம் வரும் என்பது கணிப்பு. இதனாலேயே நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தள்ளுபடி அறிவிக் கிறார்கள். வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களும் முதலீடுகளைக் கொட்டுகிறார்கள்.

தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது முதல் 10 இடங்களில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனங்களும் ஒரு நாளைக்கு 90 லட்சம் டாலர் அளவுக்கு நஷ்டத்தை சந்திக்கின்றன. தற்போதைய நிலையில் இந்த நஷ்டம் என்றால், அதிக மக்கள் பயன்படுத்தும் போது இன்னும் அதிக நஷ்டம் வருமே. அப்படியானால் இன்னும் சில வருடங்களுக்கு இந்த நிறுவனங்கள் சந்தையில் தாக்கு பிடிக்கவே பல மில்லியன் டாலர்கள் தேவைப்படும்.

ஏற்கெனவே பல மில்லியன் டாலர்கள் முதலீடு செய்த பிறகு, இனியும் முதலீடு செய்ய வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் முன்வருமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இ-காமர்ஸ் நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு தள்ளுபடி கொடுக்க முடியாது என்பதுதான் யதார்த்தமான நிலையாக இருக்கிறது.

மதிப்பீடு

இது ஒருபுறம் இருக்க இ-காமர்ஸ் நிறுவனங்களின் மதிப்பீடு தொடர்ந்து உயர்வதாகவும் சந்தையில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உதார ணத்துக்கு பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 1,600 கோடி டாலர் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. பல பெரிய நிறுவனங்களின் மதிப்பை விடவும் இந்தத் தொகை பெரியதாக இருக்கிறது.

இந்த நிறுவனங்களின் மதிப்பு அதிகமாக இருந்தாலும் எப்போது பணமாக மாறும் என்ற விஷயத்தில் அனலிஸ்ட்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இ காமர்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்த வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களுக்கு மூன்று வகைகளில் பணம் கிடைக்கலாம்.

முதலாது ஐபிஓ (பொதுப்பங்கு) வெளியிடலாம். இப்போதைக்கு இந்தி யாவில் அதற்கான சாத்தியம் குறைவு என்ற அவர்கள் கருதுகிறார்கள். இங்கு இவ்வளவு தொகை திரட்ட முடியாது என்பது கணிப்பு. அலிபாபா போல அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடலாம். ஆனால் அனைத்து நிறுவனங்களுக்கும் இது சாத்தியம் கிடையாது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை வாங்குவது. இதற்கும் வாய்ப்பு குறைவே என்ற பேச்சு இருக்கிறது.

அமேசான் போன்ற ஒரு நிறுவனம் இந்தியாவில் ஒரு நிறுவனத்தை வாங்கு வதை விட சொந்த நிறுவனத்திலே அவர்கள் முதலீடு செய்கிறார்கள். மூன்றாவது இந்திய இகாமர்ஸ் நிறுவனங்களுக்குள் இணைப்பு. இதற்கான வாய்ப்பு அதிகம் என்பதுதான் அவர்களின் கருத்தாக இருக்கிறது.

கணக்கீட்டு குழப்பம்

பொதுவாக நிறுவனங்களில் விற்பனை இவ்வளவு என்ற அளவீடுதான் இருக்கும். ஆனால் இங்கு ஜிஎம்வி (gross merchandise value) என்ற அளவில் மதிப்பீடு செய்கிறார்கள். ஒரு பொருளின் மதிப்பு 130 ரூபாய்.

இதில் 30 ரூபாய் தள்ளுபடி கொடுத்தால் 100 ரூபாய்க்கு பொருள் விற்கப்படுகிறது. ஆனால் ஜிஎம்வி 130 ரூபாய் என்பது கணக்கீடு செய்கிறார்கள். 30 ரூபாய் என்பது மார்க்கெட்டிங் கட்டணமாக பதிவு செய்கிறார்கள். இந்த கணக்கீட்டு முறையிலும் பல அனலிஸ்ட்களுக்கு சந்தேகம் இருக்கிறது. சீனா இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் ஜிஎம்வி 29,600 கோடி டாலர்கள். ஆனால் விற்பனை அளவு 800 கோடி டாலர் மட்டுமே.

பாதக அம்சம்

சில வருடங்களுக்கு முன்பு சீனா இருந்த நிலையில் இப்போது இந்தியா இருக்கிறது. இப்போது அங்கு 50 சதவீதம் ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறார்கள். இந்தி யாவில் அவ்வளவு நபர்கள் இன்னும் வாங்கவில்லை. தவிர ஸ்மார்ட் போன்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால் மொபைல் மூலம் பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்ற வாதத்தை ஏற்பதாக இருந்தாலும் வேறு காரணமும் சொல்லப்படுகிறது.

சீனாவில் பயன்படுத்தப்படும் மொபைலில் ஆங்கிலம் கிடையாது. ஆனால் இங்கு ஆங்கிலம்தான் பயன்படுத்துகிறோம் என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் மொபைல் மூலமான விற்பனை உயராது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

டாட் காம் பபுள் போல உடனடியாக இந்த நிறுவனங்கள் காணாமல் போகாது. ஆனால் இ காமர்ஸ் சந்தையில் பெரிய மாற்றம் நிகழ்வது நிச்சயம்.

karthikeyan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

ஓடிடி களம்

21 mins ago

விளையாட்டு

28 mins ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்